Sunday, December 20, 2009

தமிழ்நதி பதிவுகள்


கவிஞர் குட்டி ரேவதியைப் பற்றி சிறிய அறிமுகம் தரும்படி கேட்டிருந்தீர்கள். சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், பூனையைப் போல அலையும் வெளிச்சம்(2000), முலைகள்(2002),தனிமையின் ஆயிரம் இறக்கைகள்(2003) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்திருக்கிறார். மிகவும் அற்புதமான கவித்துவம் நிறைந்தவர். எழுத்து,பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவரும் இவர், பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. ‘முலைகள்’என்று தனது கவிதைத் தொகுப்பொன்றிற்குப் பெயர் சூட்டிய காரணத்தால் கலாச்சாரக் காவலர்கள் என்று சொல்லப்படுபவர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டவர். இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.


Wednesday, November 25, 2009

“சிங்காரச் சென்னை” நோக்கி

“சிங்காரச் சென்னை” நோக்கி.. : சபா நாவலன்

லங்கைத் தமிழர் இரத்தவாடை இன்னும் வீசிக்கொண்டிருக்க சென்னை விமான நிலையத்தில் கூட்டத்தோடு கூட்டமாக வந்திறங்கிய வேளை வெம்மையும் வேதனையும் ஒருங்குசேர்ந்து என்னை வரவேற்றது. immigration சோதனைகளுக்கான நீண்ட நெடும் வரிசையில் காத்திருக்க நீலைச் சேலையில் வயது முதிர்ந்த அந்தப் பெண் சுத்திகரிப்பு வேலைகளை சோர்வுடன் நகர்த்திக்கொண்டிருந்தார்.traffic-chennai

இந்தியாவில் தொழிற்புரட்சி ஏற்பட்டுவிட்டதாக உலகம் முழுவது மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை சுத்தப் பொய் என்று பிரச்சாரம் செய்ய அந்தப் பெண் தொழிலாளி ஒரு அடையாளமாகவே தெரிந்தார். வெற்றிலையால் சிவப்பேறிய சுங்கப்பரிசோதனை அதிகாரி எந்த விசாரனையுமின்றி வெளியனுப்ப, இந்திய மண்ணில் அதுவும் தமிழ்ப் பேசும் மக்கள் திரளுக்க்குள் நானும் சங்கமமாகிக்கொண்டு புகை கக்கும் முற்பணம் செலுத்தும் டக்சியில் உட்காந்து கொள்கிறேன்.

12 மணி வெம்மை டக்சியின் இரும்பை உருக்கிவிடுமோ என்று பயங்கொள்ள வைத்தது. லண்டன் நிலக்கீழ் வண்டித்தொடர்கள் எழுப்பும் இரைச்சல் மனிதனின் கேட்கும் ஆற்றலைப் பாதிக்கவல்லது என இங்கிலாந்தில் பிறந்த இந்திய விஞ்ஞானி எழுதிய போது பத்திரிகைகள் முதல் பக்கத்தில் அவற்றைப் பிரசுரித்திருந்தன. அது உண்மையானா இந்திய வாகன இரச்சல்கள் மனிதனைச் செவிடாக்கிவிடும் ஆற்றல் படைத்தவை என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.
தமிழ் நாட்டிற்கு இது எனது முதல் பயணமல்ல. 80 களின் ஆரம்பத்தில் ரெலோ இயக்கத்தின் கொலைக் கரங்களுக்குப் பயந்து எனது ரீன் ஏஜ் இன் ஒரு வருடம் தமிழ நாட்டின் தெருக்களில் மறைந்து திரிவதிலேயே கழிந்திருக்கிறது. சில வருடங்களின் முன்னர் “சிங்காரச் சென்னை” வரவேற்க வரவேற்க இதே தெருக்களில் சுற்றியிருக்கிறேன். வேறுபாடு என்னவென்றால் உலகமயம் உருவாக்கிய சென்னையின் வீதிகளில் வேறுபாடுகளை மட்டும் தேடிக்கொண்டிருந்தேன் என்பது மட்டுமே.

முதலாளித்துவம் உருவாகி அது ஏகபோகமாக வளர்ந்துவிட்ட ஒரு தேசத்தின் அன்னிய வாசியாகிப் பல வருடங்களின் பின்னர் தேசங்களுக்கிடையேயான ஒப்பீட்டைத் தேடும் உணர்வு உருவாகியிருந்தது.

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் செல்வங்களையும் வழங்களையும் சுரண்டிச் சேர்த்த செல்வத்தில் உருவான வல்லரசின் தெருக்களில் வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும் அழகை ரசித்த புலம்பெயர் ஆசியன் என்ற வகையில் இந்தியத் தெருக்கள், அருவருப்பை விஞ்சிய பய உணர்வையே அதிகப்படுத்தியிருந்தது.

எல்லாவற்றிலும் மேலாக ஒரு மூன்றாவது உலகம் அதுவும் நான் பிறந்து வளர்ந்த தேசத்தின் கொல்லைப் புறம் தனது தேசிய வழங்களை வளர்த்துக்கொள்ளும் என்று அங்காலய்ப்பில் ஏற்பட்ட ஏமாற்றம் என்னைத் துரத்த ஆரம்பித்தது.
உலகத்தின் அத்தனை அழுக்குகளும் சென்னையின் தெருவோரங்களில் தானா கொட்டப்படுகிறது என்று அங்கு முதல் வருகின்ற மனிதன் எண்ணுவதில் எந்தத் தவறும் இருக்கமுடியாது. ஒவ்வொரு கால் கிலோமீட்டருக்கும் அழகான குப்பைக்கூடைகளைப் வைத்திருக்கும் ஐரோப்பிய அரசுகளைப் chennairesபோல் இந்திய அரசிடம் பணம் இல்லை என்கிறார் சற்று தேளிவாகவே பேசும் டக்சி ஓட்டுனர். அப்போ இந்த வெளி நாட்டுக் கோப்பரேட் நிறுவனங்கள் எல்லாம் வரிகட்டுவதே கிடையாதா என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.

இந்த அழுக்குகளை எல்லாம் மீறி முளை விட்டுக்கொண்டிருக்கும் கட்டடக் குவியல்களும் கொங்றீட் சுவர்களும் உலகமயத்தின் ஆசிய விரிவாக்கத்தை விளக்கிக்கொண்டிருந்தது.

டக்சி “சிங்காரச் சென்னையின்” மையப்பகுதியை அண்மித்துக் கொண்டிருந்தது. அண்ணாசாலையில் ஆண்டுக்கணக்கில் சுத்தம் செய்யப்படாத அழுக்கு நிறைந்த பஸ்வண்டியின் வாசலுக்கு வெளியிலும் மனித்தத் தலைகள் தென்பட்டன. அந்த நெருக்கத்திலும் தன்னை நுளைத்துக்கொள்ள முனைந்த இளைஞன் கால் தவறி விழுந்து சுதாகரித்துக்கொண்ட போது யாரும் கண்டுகொள்ளவில்லை. கலாச்சார உலகமயம் உருவாக்கிய மனிதப்பெறுமானம் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்து கொள்ள இதைவிடச் சிறந்த உதாரணம் காணப்பட முடியாது.

சக மனிதனின் உணர்வுகளிற்குப் பெறுமனமிழந்து போனதன் மற்றொரு வடிவம் தான், அனைத்து மனிதர்களும் உலகத்தின் அத்தனை ஓரங்களிலிருந்தும் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்க அரங்கேறிய வன்னிப் படுகொலைகள். அத்தனையும் நடந்து முடிந்த பின்னர் படுகொலையின் சூத்திரதார்ரிகளோடு எந்தக் கூச்சமுமின்றி கைகுலுக்கிக் கொள்ளும் அவமானம் இங்கிருந்துதான் ஆரம்பமாகியிருக்கிறது என எண்ணத் தோன்றியது.
80 களின் ஆரம்பத்தில் தென்னிந்தியா இப்படி இருந்ததில்லை. மாற்றங்கள் எல்லாம் மேல்தட்டு மனிதர்களுக்கு மட்டும் தான் நிகழ்ந்திருக்கிறது.
மஞ்சள் நிற முச்சக்கர வண்டிகளையும் அதனோடு போட்டிபோட்டுக்கொண்டு நச்சுப் புகை கக்கும் அத்தனை வாகனங்களையும் கடந்து தெருக்களில் சென்னை மத்தியதரவர்க்கம் பன்னிரண்டு மணி வெய்யில் கொடுமையிலும் எந்தச் சலனமுமின்றி எதையோ தொலைத்துவிட்ட அவசரத்துல் ஓடிக்கொண்டிருந்தது.

ஐரோப்பிய மத்தியதர வர்க்கம் வீதி ஒழுங்கை நிலைநாட்டக் கோரியும், சுற்றுச் சூழல் மாசடைவதற்கு எதிராகவும் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே போராட்டங்களை நடத்தியிருக்கிறது.

பிராஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்த்திய வீரம் மிக்க போராட்டங்கள் தான் வேலை இழந்தோருக்கு வழங்கப்படும் “ஷோமாஸ்” என்கிற மாதந்தக் கொடுப்பனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இவ்வாறான சமூக உதவித் திட்டங்களுக்காகவும், அபிவிருத்திக்களுக்காகவும் பணத்தைப் பெற்றுக்கொள்ள, மேலைத்தேச அரசுகள் எல்லாம் வர்த்தக நிறுவனங்களிடம் வரி விதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இந்த வரிவிதிப்பைக் கூட விரும்ப்பாத நிறுவனங்கள் தான் இந்தியா போன்ற வரிவிதிப்பற்ற நாடுகளை நோக்கி நகர்ந்தன. அங்கெல்லாம் மேற்கின் நிறுவனங்களிற்கான வரி புறக்கணிக்கப்படத் தக்கது. அதுமட்டுமல்ல மலிந்த கூலியும் கிடைக்கிறது.

இதன் மறு விளைவாக சிறு உற்பத்திகள் அழிந்து போகின்றன. அவையெல்லாம் இராட்சத நிறுவனங்களால் விழுங்கப்படுகின்றன. இதனால் சென்னைத் தெருக்களைப் போல இந்தியா எங்கும் நாளையை உணவிற்காக ஏங்கும் எழைகளின் தொகை அதிகரிக்கிறது. இந்த எழைகளுக்கு ஊழல் மிகுந்த இந்திய அரசுகள் எந்த மானியக் கொடுப்பனவும் வழங்குவதில்லை. மக்களை இதற்காகப் போராடத் தூண்டுகின்ற யாரும் இல்லாமையால் பெரும் வியாபார நிறுவங்களிடமிருந்து வரியைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக அவற்றிற்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து மக்களின் பணத்தை வழங்குகின்றனர்.

மறு புறத்தில் இந்தியாவில் உருவகும் எதிர்ப்பு சக்திகள் தமக்குக் குறித்த எல்லைகளை வகுத்துக்கொண்டு அதற்கு வெளியே வருவதில்லை. மாவோயிஸ்டுக்களுக்கு பழங்குடி மக்களும் கூலி விவசாயிகளும் மட்டும்தான் அரசியல் தளம். அப்படித்தான் சீனாவில் இருந்ததாம். தெருவோரத்தில் தவிக்கவிடப்பட்டுள்ல இந்த நகர்ப்புற மத்தியதர வர்க்கம் இவர்களின் ஆதரவு சக்திகளாகக் கூட கருதப்படுவதில்லை.

ரிலயன்ஸையும், டாட்டவையும் வெளியேறக் கோரிப் போராட்டம் நடத்தப்படுகிறது. அவர்கள் வெளியேறுவதில்லை. சில தடங்கல்களின் பின்னர் பல்தேசியக் கம்பனிகள் தமது இருப்புக்களைப் பலப்படுத்திக் கொள்கின்றனர். இவையெல்லாம் வெற்றுக் கோஷங்கள் ஆகிப்போகின்றன.

இவ்வாறான இராட்சதக் கொம்பனிகளால் பாதிக்கப்பட்ட மக்களையும் சிறு வியாபாரிகளையும் இணைத்துக்கொண்டு ஐரோப்பாவில் நிகழ்ந்த போராட்டங்கள் போன்ற இழப்பீடு கோரும் போராட்டங்கள் நடத்தப்படுவதில்லை. இவ்வாறான வெகுஜனப் போராட்டங்கள் நடத்தப்பட்டல் மட்டுமே அரசு வியாபார நிறுவனங்களை வரிவிதிக்கும் நிலைக்குத் தள்ளப்படும். மக்களும் போராட்ட சக்திகளை நோக்கி அணிதிரட்டப்படுதல் சாத்தியமாகும். அது தவிர பல்தேசியக் கொம்பனிகளின் ஆதிக்கம் தளர்ந்து உள்ளூர் மூலதனம் வளர்சியடையும்.

இவற்றையெல்லாம் முற்போக்கு இயக்கங்கள் கையாளத் தவறியதன் விளைவுதான் தன்னார்வ அரசு சாரா நிறுவனங்கள்(NGO) சூழல் மாசடைதல் குறித்தும், வீதி ஒழுங்கு குறித்தும் விழிம்பு நிலை மக்கள் குறித்தும் பேசுகின்றன. இறுதியில் இவர்கள் அரசோடு முரண்படாத, பன்நாட்டு நிறுவனங்களுக்குப் பாதிப்பற்ற தற்காலிக உதவிகளை முன் மொழிகின்றன.

இதன் விளைவாக மக்கள் தமது வாழ்வுரிமைக்காகப் போராடுவதைவிட சரணடைதலையும் சமரச்சம் செய்தலையுமே தீர்வாக ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவற்றிற்கெல்லாம் எதிராக மக்களை அணிதிரட்டவும் அவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை, போராட்டங்களூடாகவும் அவற்றின் வெற்றிகளூடாகவும் ஏற்படுத்தவும் யாரிடமும் திட்டவட்டமான நிகழ்ச்சி நிரல் இல்லை. இலங்கையில் புலிகளிடம் வேறும் கோஷங்களும் ஆயுதங்களும் மட்டுமே இருந்தன. இந்திய முற்போக்கு இயக்கங்களிடம் கோஷங்களைக் கடந்து யாதார்த்தத்தை நோக்கிய தந்திரோபாயம் அதிகம் காணப்படவில்லை.

மவுண்ட் ரோட்டில் குளிராக ஏதாவது அருந்தலாம் போலிருந்தது. டக்சி ரைவரிடம் கேட்டால், கோலாவைத் தவிர எதுவும் கிடைக்கவில்லை. ஐரோப்பாவில் சிறுவர்கள் கூட கோலாவை நச்சுப்பொருளாகக் கணிக்கும் காலகட்டத்தில் “கந்தசாமி” விக்ரமும் ராதிகாவும் கொக்கோகோலாவிற்கு விளம்பரம் வேறு. ஆக, மவுன்ட் ரோட்டில் உள்ளூர் பழரசமும் பார்கிங்கும் கிடைக்கும் ஒரே இடம் ஸ்பென்சர் பிளாசா மட்டும்தான் என்றார் டக்சிக்காரர். இருவருமாக அங்கே போனால், தமிழ் நாட்டின் மேல் மத்தியதர வர்க்கத்தின் “காசி” அதுதான் என்று அறிந்து கொள்ள நேரமெடுக்கவில்லை.
பிரான்சிற்குப் போனால் பிரஞ்சு மட்டும்தான் பேசுவார்கள்; ஜேர்மனியில் டொச் மட்டும்தான்; இத்தாலியில் இத்தாலியன் மட்டும்தான்; ஆனால் ஸ்பென்சர் பிளாசாவில் ஆங்கிலமும், ஹிந்தியும், கொஞ்சத் தமிழும் கலந்த ஒரு புதிய மொழி spencerபேசுவார்கள். நான் ஐரோப்பாவிற்கு அகதிகள் கூட்டத்தோடு வந்தவன் என்ற குற்ற உணர்வு உறுத்துவதுண்டு. ஆனால் சொந்த நாட்டிலேயே கலாச்சார அகதிகளான இந்திய மேல் மத்தியதர வர்க்கத்தைக் கண்டதும் அதெல்லாம் ஒரு நொடியில் சிறகு முளைத்துப் பறந்துபோய்விட்டது.

என்றாவது ஒரு நாள் தாஜ் கொன்னிமாராவிலோ அன்ன பூரணாவிலோ, பார்க் ஹொட்டேலிலோ, ஹெச்.எப்.ஓ இலோ, சோழாவிலோ பணம் பற்றிய துயரின்றி வைனோ விஸ்கியோ அருந்த வேண்டும் என்பதுதான் இங்கு குளிர்பானம் அருந்தும் ஒவ்வொரு மனிதனதும கனவு. அதுவும் ஸ்பென்சர் பிளாசா முன் தெருவில் பிச்சை கேட்கும் பச்சைக் குழந்தைகளைத் தாண்டி குளிரூட்டப்பட்ட அன்னிய தேசத்து வாகனங்களில் அமர்ந்து சென்னைப் புகைமண்டலத்தைக் கடந்து செல்ல வேண்டும்.
உலகமயத்தின் பின்பகுதி; அது தெளிவாகத் திட்டமிட்ட படியே புதிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது அது இன்னும் இதையும் கடந்து செல்லும். இவற்றியெல்லாம் எதிர் கொண்டு புதிய சமுதாயத்தை நோக்கிய நகர்வில் இந்திய முற்போக்கு சக்திகளின் திட்டமிடல் என்ன என்பது தான் இங்கு பிரதான வினா. முத்துக்குமார் போன்ற மனிதாபிமானம் மிக்க தியாகிகள் பிறந்த மண்ணில் நம்பிக்கைகள் இன்னும் செத்துப்போகவில்லை.

ஈழப்பிரச்சனை ஒன்றைத் தெளிவாக முன்வைத்துள்ளது; யார் நண்பன் யார் எதிரி என்பதைத் உலகெங்கும் திட்டவட்டமாக கோடுபோட்டுக் காட்டியுள்ளது. தமிழ் நாட்டின் ஊடகவியலாளர்கள் சமூக உணர்வு மிக்க போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். புதியவர்கள், எல்லாவற்றையும் கேள்வியெழுப்பும் ஒரு கறைபடியாத கூட்டம் உருவாகிக் கொண்டிருக்கின்றது என்ற துளி நம்பிக்கையில் குளிர்பானத்தின் இறுதிப் பகுதியை முடிக்கும் போது குளிர்பானக் கடைப் பையனின் குரல் “Anything else, sir”..

சென்னையில் முதல் நாள் : ஒரு பயணக் குறிப்பு (02.08.2009)

நன்றி : inioru.com

Friday, November 6, 2009

பாரம்பரிய உணவு முறைகள்

பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?

திரைப்படங்களில் கிராமத்து சீன். கதாநாகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான். இன்றைய நி கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.

ஆனால் முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில, நம் சினேகிதிகளுக்காக...

"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூ சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி!)

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

நன்றி: ராகவி - சினேகிதி - செப்டம்பர் 2009

நன்றி:http://www.chittarkottai.com/


Sunday, September 20, 2009

கட்டுரையும் எதிர் வினையும் -காலச்சுவடு்.காம்


மருத்துவ அகராதி தந்த மேதை

ஒரு துன்பியல் நாடகம்

ஆ. இரா. வேங்கடாசலபதி

4,000 பக்கங்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலை ச்சொற்களும் கொண்டு, இன்றளவும் பயன்படத்தக்கச் சிறந்ததொரு கருவி நூலாக விளங்குவது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி. தமிழ் அகராதியியலில் பெருஞ் சாதனையாகத் திகழும் இந்த அகராதி உருவான (1912 - 1936) அதே காலகட்டத்தில் மற்றொரு சிறந்த அகராதியும் உருவாகியிருக்கிறது. பல்கலைக்கழக அகராதி ஒரு பெரும் கல்வி நிறுவனத்தால், பல லட்சம் பணச் செலவில், ச. வையாபுரிப் பிள்ளை என்ற பேரறிஞரின் தலைமையில், மு. ராகவையங்கார், ஜி.யு. போப், அனவரத விநாயகம் பிள்ளை, பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரி முதலான பல அறிஞர்களின் பங்களிப்போடு தயாரான தென்றால், இந்த அகராதி ஒரு தனிமனிதரின் முயற்சியில், அவர் ஒருவரின் பொருட்செலவில் மட்டுமே உருவானது. பெப்ரிசியஸ், வின்சுலோ போன்ற முன்னோடிகள் சென்னைப் பல்கலைக்கழக அகராதிக்குக் கைகாட்டியாக விளங்கினரென்றால் ஒரு சிறப்பகராதி என்ற முறையில் இவ்வகராதிக்கு முன்னோடியே இல்லை. தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை என்ற டி.வி. சாம்பசிவம் பிள்ளை உருவாக்கிய மருத்துவ அகராதியான A Tamil - English Dictionary of Medicine, Chemistry, Botany and Allied Sciences என்ற அரிய சாதனையே இங்குச் சுட்டப்படுகிறது.

ஐந்து பெருந்தொகுதிகளும் 4,000 பக்கங்களும் 80,000 தலைச்சொற்களும் கொண்ட இவ்வகராதி இன்றைக்கும் மலைப்பை ஏற்படுத்துவது. தமிழ்ச் சித்த மருத்துவத் துறையில் இன்றும் நினைவில் கொள்ளப்படுவதோடு நடைமுறைப் பயனும் கொண்டதாக இந்த அகராதி இருக்கிறது. பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் சாம்பசிவம் பிள்ளையின் அகராதியிலிருந்து 'சா. அக.' என்ற குறுக்கத்தோடு எடுத்தாளப்பட்ட ஏராளமான தலைச்சொற்களுக்கான சொற்பிறப்பும், விளக்கமும், ஆங்கில இனச் சொல்லும் அமைந்திருப்பதைப் பரக்கக் காணலாம். சொல்லப் போனால் 'சென்னைப் பல்கலைக்கழக அகராதிக்கு அடுத்தபடியாகப் பயன்படுவது, சாம்பசிவம் பிள்ளை தமிழ் - ஆங்கில அகரமுதலியாகும். மருத்துவத் துறையில் அது நல்கும் அறிவு மதிப்பிடுந் தரமன்று' என்றே பாவாணரின் அகரமுதலி முன்னுரை சுட்டுகின்றது.

இருப்பினும் இந்த அகரமுதலி பற்றியும் இதனை உருவாக்கிய மேதையினையும் தமிழுலகம் போதுமான அளவு அறியவோ, போற்றவோ இல்லை. பெருமுயற்சியால் திருவினையாக்கிய டி.வி. சாம்பசிவம் பிள்ளை தம் வாழ்நாளில் இந்த அகராதியை அச்சு வடிவில் முழுமையாகக் காணவும் கொடுத்துவைக்கவில்லை. பண்டை நூல்களை மட்டுமே 'நுண்பல் சிதலைகள்' தாக்கி அழிக்கும் என்ற நினைப்புக்கு மாறாக, இருபதாம் நூற்றாண்டிலும் கரையான்களும் ஈசல்களும் சிலந்திகளும் தமிழோடு விளையாடி இருக்கின்றன. இந்தத் துன்பியல் நாடகத்தை மீட்டுமொரு முறை உரைக்க இக்கட்டுரை தலைப்படுகிறது.

II

சாம்பசிவம் பிள்ளை அகராதியின் சிறப்புகளை அத்துறை வல்லாரே முழுவதுமாக மதிப்பிட முடியும். உடற்கூறு, நோய்கள், மருந்துகள், மருத்துவ முறைகள், மூலிகைகள், தாவரங்கள், ரசாயனங்கள், ரசவாதம், கானியம், யோகம், மந்திரம், தந்திரம், தத்துவம் முதலான பலவற்றையும் உள்ளடக்கியதாக இந்த அகராதி விளங்குகிறது. இது அடிப்படையில் மருத்துவ அகராதியே ஆயினும் தமிழின் வளத்தையும் செழுமையினையும் காட்டக்கூடிய ஒரு கருவி நூலாகும். அகராதி அமைப்பைக் கொண்டதாயினும், பொருள் விளக்கங்கள் முதலானவை கலைக்களஞ்சியம் எனத்தக்க அளவில் விரிவாக அமைந்துள்ளன (எ-டு: 'அவுரி'; 'காடி'). 'ஔஷத வகுப்பு' போன்ற தலைச்சொற்களுக்கான விளக்கம் ஒரு தனிக் கட்டுரையாகவே சாம்பசிவம் பிள்ளை எழுதியுள்ளார். பல தலைச்சொற்களுக்கு விரிவான அடிக்குறிப்புகளும் எழுதியுள்ளார். மூலிகைகளுக்கான விளக்கங்கள் பதார்த்தகுண சிந்தாமணி என்று சொல்லுமளவுக்கு, Materia Medica போல் மிக விரிவாக அமைந்துள்ளன.

சாம்பசிவம் பிள்ளை வகை தொகையாக ஏராளமான தலைச்சொற்களை வழங்கியுள்ளார். 'அத்தி'க்கு 14 வகை, 'சங்கு'க்கு 23 வகை என ஏராளமான செய்திகள் உள்ளன. 'பேய்' என்ற முன்னொட்டோ டு அமைந்துள்ள பதின் கணக்கான தலைச்சொற்கள் பல செய்திகளை உணர்த்துகின்றன. இதேபோல் தீவிர நாடி, துள்ளு நாடி, வன்னாடி, அபல நாடி, நெருங்கிய நாடி, நிறை நாடி, கதி நாடி, தடங்கு நாடி, இடை விடு நாடி, தளம்பு நாடி, ஒழுங்கு நாடி, சுடர் நாடி, மென்னாடி, நுன்னாடி, கம்பி நாடி, மரண நாடி, விகற்ப நாடி, சன்னி நாடி, பூத்த மங்கை நாடி, ஒடுங்கு நாடி, துடி நாடி, உதர நாடி, இரட்டை நாடி, குதிரையோட்ட நாடி, தெறிக்கு நாடி எனப் பட்டியலிட்டிருப்பது தமிழ் மருத்துவத்தின் நோயறி திறனை வியப்புறக் காட்டுகிறது. இதேபோல் தாவர வகைகளையும் மூலிகை வகைகளையும் இவ்வகராதி அடக்கியுள்ளது.

விரிவாக அமைந்த தமிழ் விளக்கங்களோடு ஆங்கிலத்திலும் விளக்கங்கள் உள்ளன. மிகச் செறிவானதும் துல்லியமானதுமான ஆங்கிலத்தில் இவ்விளக்கங்கள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, 'திகைப்பூண்டு மிதித்தால்' ஏற்படும் மருட்சியைச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி 'bewilderment' என்னும். சாம்பசிவம் பிள்ளையோ 'stupefaction' என்பார். சாம்பசிவனாரின் பொருட்சுட்டலே நுட்பமும் பொருத்தமும் உடையது. 'மயிர் நீப்பின் உயிர்வாழாக்' கவரிமான் என்ற விலங்கினை Tibetian yak என்று இவர் மா. கிருஷ்ணனுக்கு முன்பே இனங் கண்டுள்ளார். தாவர, மூலிகைப் பெயர்களுக்கு அவர் கூடுமானவரை இலத்தீனில் அமைந்த அறிவியல் பெயர்களையும் வழங்கியுள்ளார். தாம் அறியாதவற்றை 'unknown', 'unidentified' என்று அவர் குறித்திருக்கும் அறிவு நேர்மை இன்றைய ஆய்வாளர்களுக்கும் ஒரு பாடமாகும்.

இத்துணை வளமும் செழுமையும் கொண்ட கலைக் களஞ்சியத்தை டி.வி. சாம்பசிவம் பிள்ளை உருவாக்கி, பாதி வெளியிட்டு, அவர் காலமான பின் நிறைவு பெற்றதை இனிக் காண்போம்.

III

மருத்துவ அகராதி என்ற கலைக்களஞ்சியத்தைத் தனியொருவராக உருவாக்கிக் காட்டிய டி.வி. சாம்பசிவம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறியக்கூடவில்லை. இன்று கிடைக்கப்பெறும் குறைந்த அளவு தகவல்களுக்கும் நாம் அவருடைய தம்பி மகனாகிய திரு அ. ராஜபூஷணம் மன்னையார் அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம்.

டி.வி. சாம்பசிவம் பிள்ளையின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்திலுள்ள கம்மந்தங்குடி ஆகும். ஆயினும் இவர் பிறந்தது பெங்களூரில் (1880இல்). இவருடைய தாயார் மனோன்மணி அம்மாள்; தந்தையார் வில்வையா மன்னையார். இவர் படித்ததும் பெங்களூரில். பள்ளி இறுதிக்கு மேல் இவர் படிப்புச் செல்லவில்லை. 1899இல் பெங்களூரில் ஏற்பட்ட பிளேக் கொள்ளை நோயால் வெளியேறித் தஞ்சைக்கே (அம்மாப்பேட்டை) இவருடைய குடும்பம் குடியேறியது. சென்னை நகரக் காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்கமர்ந்த சாம்பசிவம் பிள்ளை, 1907இல் துணை ஆய்வாளராக்கப்பட்டார். 1903இல் துரைக்கண்ணு அம்மையாரை மணம் செய்து கொண்டார். துரைக்கண்ணு அம்மையாரின் தாய்மாமன் சென்னை நகரப் போலீஸ் துணை ஆணையாளராக விளங்கிய முதல் இந்தியரும் தமிழ் அறிஞருமான ச. பவானந்தம் பிள்ளை ஆவார். (பாரதியின் 'இந்தியா' பத்திரிகைக்கு எதிரான வழக்கையும் விசாரணையையும் நடத்தியவர் இவர்.) 1914இல் முதல் மனைவி இறந்த பிறகு, 1916இல் அம்மணி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். அவரும் தலைப்பிரசவத்தில் அடுத்த ஆண்டே காலமானார். இதன் பிறகு டி.வி. சாம்பசிவம்பிள்ளை மணம் செய்துகொள்ளவில்லை. நேர் வாரிசும் இல்லை. இது மருத்துவ அகராதியின் பதிப்பு வரலாற்றையும் பாதித்தது. 1935இல் இவர் காவல் துறை ஆய்வாளராகப் பணி ஓய்வு பெற்றார்.

ஒரு பெரும் மருத்துவக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கக்கூடிய திறனையும் ஆற்றலையும் உழைப்பையும் வெளிக்காட்டாத சராசரியான வாழ்க்கையினையே டி.வி. சாம்பசிவம் பிள்ளையின் வரலாறு காட்டுகிறது. தமது பாட்டனார் எழுதிவைத்திருந்த சில பழம் மருத்துவச் சுவடிகளே தமது அகராதிக்கு வித்தாக இருந்ததென, 1931இல் அவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையின் முன்னுரையில் சாம்பசிவம் பிள்ளை குறித்துள்ளார். தமது குடும்பத்தில் எவருக்கும் முறையான வைத்தியப் பயிற்சி இருந்ததாகத் தெரியவில்லை என்று அ. ராஜபூஷணம் மன்னையார் குறிப்பிடுகிறார். இந்நிலையில் தம்முடைய விரிவான மருத்துவப் பயிற்சியைச் சாம்பசிவம் பிள்ளை எங்கு பெற்றார் என்பதே புலப்படவில்லை. பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே படித்தவரின் ஆங்கில மொழி ஆற்றலும் வியப்பைத் தருகிறது.

கிடைக்கின்ற குறைவான வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களிலிருந்து சாம்பசிவம் பிள்ளையின் கருத்தியல் பின்புலமும் தெளிவாக வெளிப்படவில்லை. 1931இல் இவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையில் எழுதிய சுருங்கிய முன்னுரையும் (1931), முதல் தொகுதிக்கு (உயிரெழுத்துகள்) எழுதிய மிக விரிவான முன்னுரையும் - இரண்டுமே ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை - சில போக்குகளை உணர்த்துகின்றன. (மொத்தத் தொகுதிகளும் வெளிவந்த பிறகே முன்னுரை எழுத எண்ணியிருந்ததாகவும் அகராதியைச் சரியாகப் பயன்கொள்ளும் வகையைத் தெளிவுபடுத்த வேண்டியே முதல் தொகுதியிலே முன்னுரை எழுத வேண்டியதானதென்றும் கூறியுள்ளார். அவர் மறைந்த கால் நூற்றாண்டுக்குப் பிறகே நூல் முழுவதும் அச்சாயிற்று என்னும்போது இதை நல்லூழ் என்றே மகிழ வேண்டும்).

நூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட சாம்பசிவம் பிள்ளையின் முன்னுரை தமிழ் மறுமலர்ச்சிச் சிந்தனையின் தாக்கத்தைக் காட்டுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சங்க நூல்களும் அதன்வழிக் கட்டமைக்கப்பட்ட தமிழின் மேன்மை, தனித்தியங்கும் ஆற்றல், வளம் ஆகிய கருத்துகளும் திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தாக்கமும் அவருடைய கருத்துலகை வடிவமைத்துள்ளமை தெரிகிறது. இதன் ஒரு பகுதியாகவே சித்த மருத்துவத்தைத் தமிழ் மரபின் சிறப்பான ஒரு பகுதியாக அவர் காண்கிறார். நாகரிகத்தின் கொடுமுடியைத் தமிழர்கள் தொட்டதன் ஓர் அடையாளமாகத் தமிழ் மருத்துவத்தை அவர் பார்த்திருக்கிறார். நவீன மேலை மருத்துவத்தோடு ஒப்பிடவும் இது முழுமையுடையதாக அவர் கருதியிருக்கிறார். சித்தர்கள் தம் மருத்துவச் சாதனைகளை நிகழ்த்திய காலத்து ஐரோப்பா அறியாமையிலும் காட்டு மிராண்டித்தனத்திலும் மூழ்கியிருந்ததாக அவர் சொல்கிறார். நவீனக் காலத்திற்கேற்ப சித்த மருத்துவத்தை மீட்டுப் புத்துயிரளிக்காவிட்டால் அது அழிந்தும் மறந்தும் போகும் எனவும் அவர் அஞ்சியிருக்கிறார். அகராதி இந்த அச்சத்தின் வெளிப்பாடாகும்.

இந்தக் கருத்தியல் ஓர்மையே சாம்பசிவம் பிள்ளையின் பெருமுயற்சியின் பின்னணியில் தொழிற்பட்டிருக்கின்றது. தமிழ்ச் சித்த மருத்துவ நூல்களில் ஆளப்பட்டிருக்கும் ஏராளமான கலைச்சொற்களும் குழுக்குறிகளும் அவற்றின் உண்மையான பொருளை அறியத் தடையாக இருப்பதை உணர்ந்த சாம்பசிவம் பிள்ளை இதனைச் சீர்செய்ய முயன்றார். இந்தப் பணியினை அவர் எப்பொழுது தொடங்கினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 1938 கடைசியில் எழுதிய முன்னுரையில் கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட உழைப்பு எனக் குறித்துள்ளதிலிருந்து, 1910களின் தொடக்கத்தில், அவரது 30ஆம் அகவையை ஒட்டி, தம் ஆய்வுகளை அவர் தொடங்கியிருக்கலாம் எனக் கணிக்க முடியும்.

தக்க துணை நூல்கள் இல்லாமல் சாம்பசிவம் பிள்ளை தத்தளித்திருக்கிறார். கடுமையான காவல்துறைப் பணிச் சுமைகளுக்கிடையே அவர் ஆய்வு தொடர்ந்திருக்கிறது. இதில் அவருக்கு யாரேனும் துணை நின்றார்களா என்பதும் தெரியவில்லை. கலந்து பேசுவதற்கேனும் எவரேனும் இருந்தனரா எனவும் தெரியவில்லை. அவரைப் பற்றிய இரங்கலுரைகளோ நினைவுக் குறிப்புகளோ கிடைக்காதிருப்பதிலிருந்து அவர் பலரோடும் கலந்துகொள்ளாதவராக, தனித்தே செயல்படக்கூடியவராக இருந்திருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது.

IV

இவ்வாறு டி.வி. சாம்பசிவம் பிள்ளை அரிதின் முயன்று தொகுத்த அகராதியை முதலில் ஒரு சிறு சஞ்சிகையாக, 40 பக்க அளவில் வெள்ளோட்டம் விட்டிருக்கிறார். இது 1931இல் வெளிவந்திருக்கலாம். 'அ' முதல் 'அக்கினினிர்ம மந்தினி' வரை அமைந்த இந்தச் சஞ்சிகையில் 4 பக்க ஆங்கிலப் பொருளடைவும் உண்டு. இதனையே பல அறிஞர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முதலில் அவர் அனுப்பியிருக்கிறார் எனத் தெரிகிறது. பொருள் ஆதரவு வேண்டி இதனைச் செய்தாரா, கருத்தறிவதற்காக அனுப்பினாரா, விளம்பரத்திற்காக அனுப்பினாரா என்று தெரியவில்லை. இச்சஞ்சிகையைப் படித்து ஆர்க்காடு லட்சுமணசாமி முதலியார், உ.வே. சாமிநாதையர், வையாபுரிப் பிள்ளை, கா.சு. பிள்ளை, அனவரதவிநாயகம் பிள்ளை, டி.எஸ். திருமூர்த்தி முதலானோர் அளித்த கருத்துரைகளை ஆங்கிலத்தில் 'Opinions' என்ற தலைப்பில் அச்சிட்டு அதனையும் 8 பக்க அளவில் இணைத்துள்ளார்.

இதன் பிறகு 1931இல் 'அ' முதல் 'அமுத' வரைத் தலைச்சொற்கள் கொண்ட 200 பக்க சஞ்சிகையை சாம்பசிவம் பிள்ளை வெளியிட்டிருக்கிறார். இவை இரண்டும் The Research Institute of Siddhar's Science, Madras என்ற பெயரில் வெளிவந்துள்ளன. இது சாம்பசிவம் பிள்ளையே ஏற்படுத்திக்கொண்ட பெயரளவிலான நிறுவனம் என்பதில் ஐயமில்லை.

இதன் முன்னுரையில் இது ஒரு மாதிரி (Specimen) என்றே அவர் குறித்திருக்கிறார். மொத்தம் நான்கு தொகுதிகளாக, ஒவ்வொன்றும் 500 பக்க அளவில் அமையும் என்றும் அவர் எழுதியுள்ளார். ஆனால் அவர் காலமான பின்பே முழுமை பெற்ற இந்த அகராதி 4000 பக்கத்தை எட்டிவிட்டது.

கடைசியில் இந்த அகராதியின் முதல் தொகுதி 1938இல்தான் வந்தது. (ஆனால் பலர் தவறாக 1931 என்றே குறிப்பிடுகின்றனர். இதற்கான காரணம் இந்த அகராதியின் பதிப்பு வரலாற்றில் ஏற்பட்ட குழப்பங்களே ஆகும். அவற்றைப் பின்னர் காண்போம்.)

சாம்பசிவம் பிள்ளை இவ்வகராதி வெளியீட்டுக்காகத் தம் பூர்வீகச் சொத்தான இரண்டு வேலி நிலத்தை விற்றதோடு, ஓய்வூதியத்தையும் முன்னரே பெற்று 12,000 ரூபாவுக்கு மேல் செலவு செய்திருக்கிறார். (வ. சுப்பையா பிள்ளை, அ. ராஜபூஷணம் மன்னையார் ஆகியோர் தரும் தகவல் இது.) முதல் இரண்டு தொகுதிகள் அடுத்தடுத்து 1938ஆம் ஆண்டளவில் வெளிவந்ததாகத் தெரிகிறது.

1949இல் சென்னை மாநில அரசு அவருக்கு ஐயாயிரம் ரூபாய் உதவித்தொகை அளித்ததோடு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருணாசல நாயக்கர் தெருவில் ஒரு வீட்டையும் கொடுத்திருக்கிறது. இதுவும் அ. ராஜ பூஷணம் மன்னையார் தரும் தகவல். இந்த உதவியளித்தலுக்குப் பின்னே இருந்தவர்கள் யாரெனத் தெரியவில்லை. ஆனால் இந்த அரசு உதவியே அகராதிக்கு ஆபத்தாக அமைந்துவிட்டது.

மூன்றாம் தொகுதி பாதி அச்சான நிலையில், 1953இல் டி.வி. சாம்பசிவம் பிள்ளை காலமானார். வாரிசில்லாத நிலையில், சென்னை தாசில்தார் அவர் இருந்த வீட்டைப் பூட்டிவிட்டதோடு, வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தையும் எடுத்துச்சென்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்துப் பூட்டிவிட்டார். இது நடந்து ஒரு பத்தாண்டுகளுக்குப் பிறகு இதைக் கேள்விப்பட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனர்களில் ஒருவரும் மறைமலையடிகள் நூல்நிலையத்தைத் தோற்றுவித்தவருமான வ. சுப்பையா பிள்ளை (1966இல்) முயற்சி எடுத்து, சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் தேடியிருக்கிறார். அங்கு ஒரு கள்ளிப்பெட்டி நிறைய மருத்துவ நூல்களும் நிகண்டுகளும் செல்லரிப்புண்ட நிலையில் இருந்திருக்கின்றன. அதன் பக்கத்தில் ஒரு அடுக்கிலே அகராதியின் கையெழுத்துப் படிகளும் அச்சிட்ட படிவங்களும் இருந்திருக்கின்றன. மூன்றாம் பாகத்தின் 2174 பக்க எண்ணோடு முடியும் படிவத்தையும் அவர் கண்ணுற்றிருக்கிறார். (அங்கே இருந்த ஒரு பள்ளியிறுதிச் சான்றி தழிலிருந்து சாம்பசிவம் பிள்ளையின் தம்பி டி.வி. அண்ணாமலைப் பிள்ளையின் முகவரியைப் பெற்று, அவர் வழியாகச் சாம்பசிவம் பிள்ளையின் பணி அடையாள அட்டையிலிருந்த படத்தை வ. சுப்பையா பிள்ளை பெற்றிருக்கிறார். இன்று கிடைக்கப்பெறும் சாம்பசிவம் பிள்ளையின் ஒரே படம் இதுவேயாகும்.)

வ. சுப்பையா பிள்ளையின் இடையீட்டுக்குப் பிறகு, அகராதியின் கையெழுத்துப்படிகளும் அரைகுறையாக இருந்த அச்சுப்படிகளும் சென்னை அண்ணா நகர் சித்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதென அவர் 1972இல் குறித்துள்ளார்.

அங்கு அரசின் மானிய உதவியுடன் மூன்றாம் பகுதியின் பிற்பகுதி அச்சிடப் பெற்று பழைய படிவங்களோடு சேர்த்துக் கட்டப்பட்டு, வெளியிடப்பெற்றிருக்கிறது. இதில் அதன் இயக்குநர் டாக்டர் பு.மு. வேணு கோபால் முன்னின்றதாகத் தெரிகிறது. இவ்வெளியீடு 1972-1977க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். இப்பொழுது பார்க்கக் கிடைக்கும் முதல் மூன்று தொகுதிகளின் முதற்பதிப்புகளும் இச்சமயத்தில் கட்டப்பட்டதாகவே தெரிகின்றது.

இவ்வேளையில் கோவையின் விந்தை மனிதர் ஜி.டி. நாயுடுவை இந்த மருத்துவ அகராதி கவர்ந்திருக்கிறது. அவருடைய முயற்சியில் அடுத்த இரண்டு பாகங்கள் அச்சிடப்படலாயின. ஆனால் அவை வெளிவரும் முன் அவரும்஢ காலமாகிவிட்டார். கடைசியில் 1977இலும் 1978இலுமாக சாம்பசிவம் பிள்ளையின் பேரகராதியின் நான்காம் ஐந்தாம் தொகுதிகள் வெளியாயின. 1931இல் தொடங்கிய மருத்துவ அகராதியின் அச்சுவாகனப் பயணம் 47 ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவு பெற்றது.

இவ்வாறு கடைசி மூன்று தொகுதிகளும் அச்சிட்டு, கட்டப்பட்டு முற்றுப்பெற்றபோது சில பதிப்புக் குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. நான் பார்த்த பிரதிகளெல்லாம் பழைய படிவங்களோடு புதிதாக அச்சிட்ட படிவங்களும் சேர்த்துக் கட்டடம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. தலைப்புப் பக்கமும் புதிதாக அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளது தெரிகிறது. (சாம்பசிவம் பிள்ளையின் காலத்தில் முழுவதுமாக அச்சிடப்பட்டு, கட்டப்பட்ட பிரதிகளை நான் கண்ணுற இயலவில்லை.) இந்தப் பிரதிகளில், வெள்ளோட்டமாக அச்சிடப்பட்ட சஞ்சிகையின் முகப்பை மாதிரியாகக் கொண்டு, 1931 எனப் பதிப்பு ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது. இது பிழை. 1938இல்தான் முதல் இரு தொகுதிகள் அணியமாயின என்பதை முன்னரே கண்டோ ம். மேலும் நான் பார்வையிட்ட ஓர் இரண்டாம் தொகுதியில் 930 முதல் 1488 பக்கம் வரை சாம்பசிவம் பிள்ளை காலத்து அச்சுப்படிவங்களும் 1489 முதல் 1752 பக்கம் வரை (ஜி.டி. நாயுடு அறக்கட்டளையால்) நான்காம், ஐந்தாம் தொகுதிகள் அச்சிடப்பட்ட அதே அச்சகத்தில் அதே தாளில் அச்சிடப்பட்டுள்ளது தெரிகிறது. இதிலிருந்து, சாம்பசிவம் பிள்ளை மறைந்தபொழுது பல அச்சுப் படிவங்கள் கட்டப்படாமல் இருந்திருக்கும் என எண்ண இடமுண்டு.

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் அரிய பதிப்புகளெல்லாம் பெரும் அலைக்கழிப்புகளுக்குப் பின்னரே வெளிவந்திருக்கின்றன. தீயூழாக, இந்த முயற்சிகள் பற்றிய போதுமான பதிவுகள்கூட இல்லை. இவ்வளவு அரிய அகராதியைப் பற்றி 'சொல்பொருள்' என்ற 900 பக்க அளவில் அமைந்த சிறப்பான தமிழ் அகராதி வரலாறுகூட இரண்டு இடங்களில் பெயரளவில் மட்டுமே சுட்டுகிறது. 19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மொழி அகராதி தயாரிக்கப்பட்ட அனுபவத்தை விளக்கும் சிறு நூலை பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு தமிழ்ப் பதிப்பகம் வெளியிடும் (Emile Littre, How I Made My Dictionary, Cre-A, 1992) சூழ்நிலையில் டி.வி. சாம்பசிவம் பிள்ளை போன்ற அறிஞர்கள் போற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா?

பின்குறிப்பு

பல்லாண்டுகளாகக் கிடைக்கப்பெறாமல் இருந்த இந்த அகராதியைத் தமிழக அரசு 1990களில் மறுபதிப்பிட்டுள்ளது. எப்படி நூல் வெளியிடக் கூடாது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும். முதல் பதிப்பின் ஐந்து தொகுதிகளும் ஒரே சீராக ராயல் அளவில் தொடர் பக்க எண்களோடு நேர்த்தியாக அச்சிடப்பட்டவையாகும். புதிய 'பதிப்'போ ஆறு பகுதிகளாக வெவ்வேறு அளவில் அச்சிடப்பட்டுள்ளது. முதல் தொகுதி டெம்மிக்கும் குறைந்த அளவில் 1742 பக்கங்களில் புதிதாகப் பல பிழைகளோடு அச்சுக் கோக்கப்பட்டு ஒரே நூலாகச் செங்கல்போல் அமைந்துள்ளது. இரண்டாம் தொகுதி 'ஆப்செட்' முறையில் பழைய பதிப்பு அப்படியே படம்பிடித்து வெளியிடப்பட்டுள்ளது - நல்லவேளையாக! ஆனால் இது 929ஆம் பக்கத்தில் தொடங்கி 1752ஆம் பக்கத்தில் முடிகிறது! மூன்றாம் தொகுதியும் இதே 'ஆப்செட்' முறையில் 1753ஆம் பக்கம் தொடங்கி 2224ஆம் பக்கத்தில் முடிகிறது.

நான்காம் தொகுதி இரண்டு பாகங்களாகப் புதிதாக அச்சுக் கோத்து அச்சிடப்பட்டுள்ளது. காரணம் விளக்கப்படவில்லை. இதன் முதல் பாகம் 1ஆம் பக்க மெனப் புதிதாக இலக்கமிடப்பட்டு 1020ஆம் பக்கம்வரை உள்ளது. இரண்டாம் பாகம் இதன் தொடர்ச்சியாக 2000 பக்கம்வரை உள்ளது. ஐந்தாம் தொகுதி மட்டும் ராயல் அளவில் புதிதாக அச்சுக்கோத்து, 1 முதல் 1291 பக்கம் வரை எண்ணிடப்பட்டுள்ளது. அச்சுப் பிழைகள், வடிவமைப்பு, நேர்த்தி முதலானவை பற்றிச் சொல்லாமலிருத்தல் நலம். சாம்பசிவம் அகராதி தொடர்ந்து அச்சில் உள்ளது என்பதைத் தவிர இதில் மகிழ்வதற்கு ஏதுமில்லை.

துணைநூல்கள்

1. டி.வி. சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகராதிப் பதிப்புகள்.

2. டி.வி. சாம்பசிவம் பிள்ளை வெளியிட்ட மருத்துவ அகராதியின் மாதிரி சஞ்சிகைகள்.

3. அ. ராஜபூஷணம் மன்னையார், சித்த மருத்துவ மேதை டி.வி. சாம்பசிவம் பிள்ளை, குருவருள் பதிப்பகம், சென்னை, 2002.

4. வ. சுப்பையா, 'படந்தொகுத்தலிற் பட்டறிவு' (2), செந்தமிழ்ச் செல்வி, சூலை 1972.

தம் பெரியப்பா பற்றி விரிவான பல செய்திகளைப் பகிர்ந்துகொண்ட திரு. அ. ராஜபூஷணம் மன்னையார் அவர்களுக்கும் டி.வி. சாம்பசிவம் பிள்ளையின் சாதனையை எனக்கு முதலில் அறிமுகப்படுத்திய மறைந்த புலவர் த. கோவேந்தன் மற்றும் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்களுக்கும் நன்றி உரியது.

--- காலச்சுவடு, ஜனவரி 2007

எதிர்வினை

சான்றோர் குலப் பண்டிதரும் சாம்பசிவம் பிள்ளையும்:
சில கேள்விகள்

"மருத்துவ அகராதி தந்த மேதை - ஒரு துன்பியல் நாடகம்" என்ற தலைப்பில் சாம்பசிவம் பிள்ளை பற்றிய ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களின் கட்டுரை (காலச்சுவடு, ஜனவரி 2007) வெளி வந்துள்ளது. தஞ்சை வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை என்ற டி.வி. சாம்பசிவம் பிள்ளை என அவர் முழுப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

'மண்ணையார்' (மன்னையார்) என்பது தஞ்சாவூர்ப் பகுதிக் கள்ளர் சமூகத்தவருள் ஒரு பிரிவினரின் குடும்பப் பெயராகும். சாம்பசிவம் பிள்ளை தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்திலுள்ள கம்மந்தங்குடியைச் சேர்ந்த வில்வையா மன்னையாருக்கும் மனோன்மணி அம்மாளுக்கும் பிறந்தவர் என்ற தகவல் கட்டுரையாசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தமிழறிஞரும் சென்னை நகரக் காவல் துறைத் துணை ஆணையாளருமான பவானந்தம் பிள்ளையின் சகோதரி மகள் துரைக்கண்ணு அம்மையாரை 1903இல் மணந்துகொண்டார் எனவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாம்பசிவம் அவர்களுக்கு பிள்ளை பட்டம் அகம்படியர் அல்லது வேளாளர் குலத்தவருடனான மண உறவால் வந்திருக்கலாம். அல்லது, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய சமூகச் சூழலுக்குத்தக புனைந்துகொண்ட பட்டமாக இருக்கலாம்.

சாம்பசிவம் பிள்ளையின் கருத்தியல் பின்புலம் தெளிவாக வெளிப்படவில்லை. இவருடைய குடும்பத்தில் எவருக்கும் முறையான மருத்துவப் பயிற்சி இருந்ததாகவும் தெரியவில்லை. காவல் துறை ஆய்வாளராகப் பணி புரிந்தவர் இவர். இவருடைய பாட்டனார் எழுதிவைத்திருந்த சில பழைய மருத்துவச் சுவடிகளே தமது அகராதிக்கு வித்தாக இருந்தன என 1931இல் அவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையின் முன்னுரையில் சாம்பசிவம் பிள்ளை குறிப்பிட்டுள்ளதாகவும் கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். சாம்பசிவம் பிள்ளையின் காலத்தில் முழுவதுமாக அச்சிடப்பட்டுக் கட்டப்பட்ட பிரதிகளைக் கட்டுரையாசிரியர் கண்ணுற இயலவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழப்பங்களையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது கீழ்வரும் ஐயங்கள் எழுகின்றன:

சற்றேறக்குறைய சாம்பசிவம் பிள்ளையின் சமகாலத்தில் (1859-1919) தஞ்சையில் வாழ்ந்தவரும் 'கர்ணாமிர்த சாகரம்' என்ற பெயரில் இசைநூல் எழுதி வெளியிட்டவருமான ஆபிரகாம் பண்டிதர் என்ற சான்றோர் குலத்தவர் (நாடார்) சிறந்த மருத்துவராகவும் இருந்துள்ளார். பண்டிதர் என்ற பட்டப் பெயர்கூட அவருடைய குலப்பட்டப் பெயர் அல்ல. தமிழ்ப் பண்டிதர் என்பதையும் மருத்துவ நிபுணர் என்பதையும் குறிப்பதற்குச் சூட்டப்பட்ட பட்டமாகும் அது. அவருடைய குடும்பத் தயாரிப்புகளான மருந்துகள் இன்றைக்கும் தஞ்சைப் பகுதியில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

மருத்துவத் துறைப் பிரிவுகளான எலும்பு முறிவுச் சிகிச்சை, வாதக் கோளாறுக்கான சிகிச்சை, வர்மச் சிகிச்சை போன்றவற்றில் சான்றோர் குலத்தவர் தன்னிகர் அற்றவர்களாக - குறிப்பாகத் தென்மாவட்டங்களில் - இருப்பது தமிழகம் அறிந்த செய்தியே. ஆபிரகாம் பண்டிதரின் பூர்விகம் தென்காசிக்கு அருகிலுள்ள சாம்பவர் வடகரை ஆகும். இவருடைய பரம்பரையே சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற பரம்பரையாகும். மேலும் இவர் 1879ஆம் ஆண்டில் சுருளி மலைக்குச் சென்று நேரடியாக மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சுருளிமலையில் கருணாநந்த ரிஷி என்பவரிடம் உப தேசம் பெற்றுப் பல்வேறு சிகிச்சை முறைகளிலும் கைதேர்ந்தவராய் ஆனார். தஞ்சைக்குத் திரும்பி லேடி நேப்பியர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணி புரிந்தார். இவருடைய மனைவி ஞான வடிவு பொன்னம்மாள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார்.

1890ஆம் ஆண்டில் வேலையை ராஜினாமா செய்துவிட்டுத் தஞ்சைப் புறநகரில் ஒரு நிலத்தை வாங்கி மூலிகைத் தோட்டம் வைத்து, அதற்குக் கருணாநந்தபுரம் என்று பெயரிட்டார். தஞ்சையில் தாம் வசித்த வீட்டில் வைத்தியச் சாலை ஒன்றை நிறுவினார். இங்கு தயாரிக்கப்பட்ட கோரோசனை மாத்திரைகள் உலகப் புகழ் பெற்றன. அப்போதைய மதராஸ் மாகாண ஆளுநர் சர் ஆர்தர் லாலி இங்கு வருகை புரிந்து இவரைப் பாராட்டியுள்ளார். 1909ஆம் ஆண்டு ராவ் சாஹிப் பட்டம் கிடைத்தது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ஆபிரகாம் பண்டிதரின் நுண்மாண் நுழைபுலம் சாம்பசிவம் பிள்ளையின் மருத்துவ அகராதித் தொகுப்புப் பணிக்குப் பின்புலமாக இருந்திருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.

பண்டிதர் 1879ஆம் ஆண்டுக்கு முன்னரே திண்டுக்கல்லில் சடையாண்டி பட்டர் என்பவரிடம் இசை கற்றார். கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயர், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் போன்ற இசை மேதைகளுடன் விவாதிக்குமளவுக்கும் அடிப்படையான கேள்விகளை எழுப்புமளவுக்கும் இசை ஞானம் பெற்றுத் திகழ்ந்தார். இராமநாதபுரம் சேதுபதியைப் புரவலராகக் கொண்ட இசைச் சங்கம் தோற்றுவிக்கப்படக் காரணமாக இருந்தார். 1916ஆம் ஆண்டில் பரோடாவில் இசை குறித்த மாநாடு நடப்பதற்குப் பண்டிதர்தான் உந்துசக்தியாகத் திகழ்ந்தார். அம்மாநாட்டில் பண்டிதர் ஆய்வுக் கட்டுரை வாசித்ததோடு, பண்டிதரின் மகள் மரகதவல்லி அம்மாள் ஸ்வரங்கள் பற்றிய செயல்முறை விளக்கமளித்தார். பண்டிதரின் பேரன் தனபாண்டியன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை இசைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

தமிழிசை தொடர்பான ஆய்வுகளிலும் பிரச்சாரங்களிலும் ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு எவ்வாறு இருட்டடிப்புச் செய்யப்படுகிறதோ, அது போன்றே சித்த மருத்துவக் கலைச்சொல் உருவாக்கத்திலும் ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு திட்டமிட்டு இருட்டடிக்கப்பட்டிருக்கலாம்.

சாம்பசிவம் மன்னையார் பிள்ளை என்ற பட்டம் போட்டுக்கொண்டதே கூட வேளாளருடைய ஆதிக்கம் நிலவிய 19-20ஆம் நூற்றாண்டுச் சமூகச் சூழலின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் எனத் தோன்றுகிறது. தமிழக வேளாளர் சமூகத்தவர் தமிழின அடையாளம் அனைத்தையும் தங்களுக்கும் தங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் மட்டுமே உரியனவாகக் காட்டிக்கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆபிரகாம் பண்டிதர் போன்ற சான்றோர் சமூகத்தவரின் பணியையும் பங்களிப்பையும் அங்கீகரிப்பது இவர்களுக்கு என்றைக்குமே உவப்பானதாக இருந்ததில்லை. இது தீவிரமான ஆய்வுக்குரிய ஒரு விஷயம்.

அ. கணேசன்
(செயலாளர், சான்றோர் குலப் பண்பாட்டுக் கழகம்,
சென்னை - 40)



நன்றி : காலச்சுவடு.
காம்

Sunday, August 9, 2009

லெமூரியா?

எதிர்வினைகளும் எதிர்கொள்ளப்படாதவைகளும்

சு.கி. ஜெயகரன்


ஒருவர் வெளிப்படுத்திய கருத்துகளை எதிர் கொள்ளும்போது அவற்றை அறிவு ரீதியாக உள்வாங்கிப் பின் மாற்றுக் கருத்துகளைத் தர்க்க ரீதியாக முன்வைக்க வேண்டும். ஆனால் பொதுவாகத் தமிழ்ப் பத்திரிகைச் சூழலில், மாறுபட்ட கருத்துகளைத் தர்க்க பூர்வமாக எதிர்கொள்ளும் தன்மை குறைவென்பதை நான் லெமூரியா பற்றி எழுதியபோது வந்த எதிர்வினைகளால் உணர்ந்தேன். கருத்துகளை எதிர்கொள்ளாமல், எழுதியவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கும் எதிர்வினைகளைக் கண்டேன்.

காலச்சுவடு இதழில், சில ஆண்டுகளுக்கு முன் 'லெமூரியா - குமரிக் கண்டம் குழப்பம்' என்ற கட்டுரையை, பின்னர் வரவிருந்த 'குமரி நிலநீட்சி' என்று தலைப்பிட்ட என் நூலுக்கு வெள்ளோட்டம் போல் எழுதினேன். அதில் மனுக் குலம் தோன்றியதற்கு முன்னிருந்த கோண்ட்வானாக் கண்டமும், மேனாட்டு மறை'ஞானி'களின் கற்பனையில் உதித்த லெமூரியாவும் சங்க இலக்கியங்கள் சில சுட்டும் குமரி என்ற நிலப் பரப்பும் வெவ்வேறானவை என்பதை விளக்கியிருந்தேன்.
அதற்கான எதிர்வினைகளை, மறைந்த கண்டத்துடன் சம்பந்தப்பட்ட புனைபெயர்களில் எழுதியோர், காலச்சுவடு எதிர்வினைகளைப் பிரசுரிக்கவில்லையென்று குறைகூறி, அவற்றை ஒப்புரவு என்ற பத்திரிகையின் இதழ் ஒன்றில் பதிவு செய்தனர். காலச்சுவடு ஒரு கருத்துப் போரைத் துவங்கியிருப்பதாகவும் அதை எதிர்கொள்ளக் குமரிக் கண்ட ஆதரவாளர் அனைவரும் முன்வர வேண்டும் என்ற அறைகூவலும் எழுதப்பட்ட அந்த எதிர்வினைகளில் கோபமே மேலோங்கியது.

கருத்துப் போர் ஆரம்பிப்பதாகக் கூறி என்மீது வசைமாரி பொழிந்த அந்த எதிர்வினைகளில் ஒன்றுகூட என் நூலிலுள்ள அறிவியல் சார்ந்த வாதங்களை எதிர்கொள்ளவில்லை. 'எப்படி இவர் இப்படிக் கூறலாம்' என்ற தோரணையில் எழுதப்பட்ட எதிர்வினைகளில் கடற்கோள், கண்டப் பெயர்ச்சி, மறைந்த கண்டம், அங்குத் தழைத்த சீரிய நாகரிகம் பற்றி எழுதி, சங்கப் புலவோர், உரைகாரர் கூறியவை கட்டுக் கதைகளாக இருக்க முடியாது என வாதிட்டனர். எப்படி 'இருந்திருக்க முடியும்' என்பதைக் கூறாத அந்த வாதங்கள், குத்துச் சண்டை பயிலுவோர் திருப்பக் குத்தாத மணல்பையின் மீது குத்துவதை எனக்கு நினைவுறுத்தின.

அவற்றில் எனக்கு விடுக்கப்பட்ட ஒரு முக்கியமான கேள்வி, 'நான் கோடிக்கணக்கில் செலவழித்துக் கடலடி ஆய்வுகள் நடத்தினேனா?' என்பது. என் வாதங்கள், அறுபதுகளுக்குப் பின் நடத்தப்பட்ட புவியியல், கடலடி மற்றும் ஆழியியல் ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆம், அவற்றிற்கென ஆய்வு நிறுவனங்கள், பன்னாட்டு அமைப்புகள் பல கோடிகள் செலவழித்துள்ளன. ஆனால் நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். மறைந்த கண்டங்கள் பற்றி எழுத ஆரம்பித்த பன்மொழிப் புலவர் துவங்கி அது பற்றி எழுதிக்கொண்டிருக்கும் பேருந்துத் தொழிலதிபர்வரை எவரேனும் ஒருவராவது கடலடி ஆய்வுகள் நடத்தியவரா அல்லது புவியியலின் அடிப்படைகளைத்தான் புரிந்துகொண்டவர்களா? அவர்கள் அனைவரும் ஸ்காட் எலியட் சொன்னார், ஹெலினா ப்ளவாட்ஸ்கி சொன்னார் என்று அவர்கள் எழுதியவற்றை, மூலங்களை ஆராயாமல், கேள்விகள் எழுப்பாமல், அவர்களின் லெமூரியாக் கோட்பாடு என்ற அரைத்த மாவையே தமிழில் அரைக்கவில்லையா?

தொல்காப்பியருக்கு முற்பட்ட புலவோர் எழுதியவற்றை மேற்கோள் காட்டி 'என்மனார் புலவோர், பாங்குற உணர்ந்தோர்' என்று எழுதும் மரபு, தொல்காப்பியத்தில் உள்ளது. அதே மரபில், நக்கீரர் தம் இறையனார் அகப்பொருளுரையில் குமரி எனும் நிலப்பகுதி பற்றிக் குறிப்பிட்டதை எழுநூறு அல்லது எண்ணூறு ஆண்டுகளுக்குப் பின் வந்த உரைகாரர் பின்பற்றினர். அவர் மிகைப்படுத்தி எழுதிய நிலவியல் விவரங்கள் வேத வாக்குகளாக! அன்று இருந்ததாக நம்பப்பட்டவற்றை, அன்று எழுதப்பட்ட இலக்கியக் குறிப்புகளை, புவியின் மேற்பரப்பைச் செயற்கைக் கோள்களால் கண்காணிக்கும் இன்று மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். மேம்பட்ட அறிவியல் ஆய்வுகளால் கண்டத் தட்டுகளின் அமைப்பு, கடல் மட்ட உயர்வு பற்றி அறிந்துகொண்ட நிலையில், சங்கப் புலவர் மற்றும் உரைகாரர் கூறியதை விடுத்து, இந்த நூற்றாண்டிற்குள் காலடியெடுத்து வைக்க வேண்டும்.

கருத்துகளை உள்வாங்காமல், அவற்றிற்கு எதிர்வினைகளை எழுதுவது ஆகாயத்துடன் சிலம்பம் செய்வது போலாகும். ஓர் எடுத்துக்காட்டு, வெகுஜனமக்கள் வார இதழ் ஒன்றில் அன்றைய அரசியல்வாதி எழுதிய மறுப்புக் கட்டுரை. 'தமிழன் மட்டுமல்ல மனிதயினம் தோன்றியதே குமரிக் கண்டத்தில்தான் என்று பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்போது பெங்களூர்க்காரர் ஒருவர், குமரிக் கண்டம் என்றே ஒன்று இருந்ததில்லை என்கிறார். அதைப் படித்ததும் இலக்கியச் செல்வர் துள்ளிக் குதித்து எழுந்துவிட்டார்' என்ற முற்குறிப்புடன் ஆரம்பித்தது 'தமிழன் தோன்றிய குமரிக் கண்டம்' என்ற கட்டுரை. அதில் 'இலங்கையில் புகழ்பெற்ற நூலாகிய மகாவம்சம், இலங்கைக்கும் தெற்கே 700 காதம் (இவர் கணக்குப்படி அது 4900 மைல்களுக்குச் சமம்!) நிலப்பரப்பு இருந்ததாகக் கூறுகிறது' என்று எழுதியிருந்தார். அந்த எதிர் வாதம் அவர் மகாவம்சத்தையோ என் நூலையோ புரட்டிக்கூடப் பார்க்காமல் எழுதியது என்பது தெளிவு.

அவர் மகாவம்சத்தைப் புரட்டிப் பார்த்திருந்தால் அதில் குமரிக் கண்டம் பற்றிய குறிப்புகள் எதுவுமேயில்லை என்பதைக் கண்டிருப்பார். என் நூலை வாசித்திருந்தால், சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நிலப்பரப்பு எதுவாகயிருக்கும் என்பதை நான் விளக்கியிருப்பதையும் அறிந்திருப்பார். புவியியல் பதங்கள் விரவலாகப் பயன்படுத்தப்பட்ட அவரது கட்டுரையில், நிலவியல் வரைபடங்கள் இரண்டு, அதில் ஒன்றில் 12 கோடி ஆண்டுகட்கு முற்பட்ட குமரிக் கண்டத்தின் படம் இருந்தது. மனித குலம் தோன்றியதே ஒரு லட்சத்திற்கும் குறைவான காலம் என்ற நிலையில், புவியின் வரலாறு, மனித குலத்தின் வரலாறு பற்றிய ஒரு அடிப்படைப் புரிதலுடன் அவை பற்றி எழுத வேண்டும்.

என்னைப் பாராட்டி, என் நூலுக்கு மதிப்புரை எழுதியவர் ஒருவர், நூலைப் படிக்காமல் எழுதியிருக்கிறார் என்றால் வியப்படைய வேண்டாம். தீராநதியில் (ஜூலை 2003) வெளிவந்த 'விஞ்ஞானமும் இலக்கியமும் கலந்த ஆய்வு' எனத் தலைப்பிடப்பட்ட பத்மாவதியின் மதிப்புரையின் ஆரம்பமே 'இலக்கிய ஆதாரங்கள், கண்டங்கள் நகர்வது பற்றிய தகவல்கள், மனித நாகரிகத்தின் வளர்ச்சி, கடல் மட்ட ஆதாரங்களைக் கொண்டு லெமூரியாக் கண்டம் கடலில் மூழ்கிவிட்டதை நிறுவுகிறது இந்தப் புத்தகம்' என்று தொடங்குகிறது. அவர் எழுதிய மதிப்புரைக்கும் என் நூலின் அடிப்படை இயங்குதளத்திற்கும் எந்த விதமான தொடர்புமில்லை. மேலும் கடலுக்கடியில் எரிமலை வெடித்துக் குமுறும்போது உருவாகும் நிலநடுக்கம் பற்றி நான் எழுதியதைப் புரிந்துகொள்ளாமல் அதையே இந்திரனுக்கு நீராட்டு விழா நடத்திய நம் முன்னோரின் பெருமை பேசப் பயன்படுத்தியிருந்தார் அவர். 'பராந்தக சடையன் வெளியிட்ட செப்பேடுகளில் உள்ள, வேள்விக்குடி செப்பேட்டில் உயர்ந்துகொண்டிருந்த மலையைத் தடுத்து நிறுவியவரும், கடல்நீர் முழுவதையும் குடித்த குடமுனியைப் பற்றிக் கூறப்பட்டதால், கண்டப் பெயர்ச்சி, மலைகள் உயர்வது பற்றி நம் முன்னோர்கள் அன்றே தெரிந்து வைத்திருந்தனர்' என்று எழுதினார்.

பாராட்டுகள் பலவகை. அவற்றில் மறைமுகமான பாராட்டு ஒருவகை. ஒருவர் பாடியதைப் போலப் பாடுவது, ஒருவர் எழுதியவற்றை எழுதுவது போன்ற செயல்களால், காப்பியடிப்பவர், தான் யாரைக் காப்பியடிக்கிறாரோ, அவர்மீதுள்ள தன் அபிமானத்தை வெளிப்படுத்துகிறார் என்றே சொல்லலாம். இதைத்தான் imitation is a form of appreciation என்ற ஆங்கிலப் பழமொழி கூறுகிறது. இவ்வகையில் என்னைப் பாராட்டியவர் நாவலர் சடகோபன் என்பவர். 'குமரி நிலநீட்சி'யில் நான் எழுதிய சில முக்கியமான கருதுகோள்களை வரிக்கு வரி எடுத்தெழுதி 'மறைந்த கண்டம்' பற்றிய கட்டுரை ஒன்றை ஒரு நாளிதழில் எழுதியிருந்தார். ஓரிடத்திலாவது அவர் அந்தக் கருத்துகளை எங்கிருந்து எடுத்தார் என்பதைக் குறிப்பிடாமல் எழுதியிருந்தார் அந்தப் பண்பாளர்! இதில் ஒரு ஆபத்து என்னவென்றால், லெமூரியா பற்றிய எனது கருத்துகள், தமிழினப் பெருமை பேசுவோரைத் தாக்கும் ஒரு தடியாகச் சிலரால் பயன்படுத்தப்படக்கூடும், மேற்கூறிய நாவலர் சடகோபன் மாதிரி. ஆனால் எனது நோக்கம் அதுவல்ல. தமிழர்கள் பெருமை கொள்ள எண்ணற்ற கூறுகள் உள்ளபோது, இல்லாத ஒன்றைப் பிடித்துக்கொண்டிருக்கத் தேவையேயில்லை என்பது என் நிலைப்பாடு.

இரு ஆண்டுகளுக்கு முன் கணையாழியில் குமரிக் கண்டம் பற்றிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். புவியியல் அபத்தங்கள் நிரம்பிய அக்கட்டுரை, மறைந்த கண்டத்தில் பாலைவனங்களும் அதில் ஒட்டகங்களும் இருந்திருக்கக்கூடும் எனச் சிலாகித்தது. அக்கட்டுரை கூறிய கருத்துகளை மட்டுமே எதிர்கொண்டு முல்லையும் குறிஞ்சியும் திரிந்து உருவாகும் பாலை நிலமும் பாலைவனமும் ஒன்றல்ல என்றும் இந்தியாவின் தென் பகுதியருகே பாலைவனங்கள் என்றும் இருந்ததற்கான புவியியல் தடயங்கள் ஏதுமில்லையென்றும், ஒட்டகங்கள் பாலைவனத்தில் பரிணமித்த விலங்குகள் அல்ல, அவை வீட்டு விலங்குகளாகப் பழக்கப்படுத்தியபின் பாலைவனங்களில் பயன்படுத்தப்பட்டன என்பதையும் குறிப்பிட்டேன். என் கட்டுரைக்கு மறுபடியும் எதிர்வினையெழுதிய அக்கட்டுரையாளர், என் கருத்துகளைத் தர்க்க ரீதியாக எதிர்கொள்ளாமல், எவ்வாறு தமிழர் தன்னம்பிக்கையின்றித் துவண்டுக் கிடக்கின்றனர் என்றும் பழம்பெருமை பேசுவதில் தவறில்லை என்றும் எனக்கு அறிவுரை அளித்திருந்தார்.

குமரி நிலநீட்சிக்கு எதிர்வினை எழுதியோர் ஏதோ தாம் மட்டும் தமிழினத்தின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின் காவலர் போன்று எழுதினர். நானும் என் பள்ளிப் பருவத்தில் மறைந்த கண்டம் பற்றியும் 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கும்' முற்பட்ட தமிழினத்தின் பெருமை பற்றியும் பேசக் கற்றுக்கொண்டேன். அதைக் கற்பித்த, தமிழ் இலக்கியத்தை மட்டுமே அறிந்த என் தமிழாசிரியர்களுக்கு நன்றி கூற வேண்டும்! பள்ளியில் கற்றுக்கொண்ட குமரிக் கண்டக் கோட்பாட்டை அன்று பரிபூரணமாக நம்பினேன். பின்னர் புவியியல் பயில ஆரம்பித்தபோதுதான், மறைந்த கண்டக் கோட்பாடு எத்தகைய மிகை என்பதும் எவ்வாறு அலங்கரிக்கப்பட்டது என்பதும் புலப்பட்டது. அதைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு எடுத்துக் கூற வேண்டும் என்ற உந்துதலால் அது பற்றி எழுத முற்பட்டேன். உண்மையைத் தேடும் என் ஆய்வுகள் அரசியல் எல்லைகளையும் சாதி-இன, மத, மொழி வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவை.

என் நூலைப் படித்துணர்ந்து நடுநிலையான மதிப்புரை எழுதியவர்களில் பொ. வேல்சாமி முக்கியமானவர். அவர் லெமூரியா - மறைந்த கண்டங்கள் கோட்பாடுகளை ஆதரித்து எழுதுபவர்களின் உள்நோக்கம் பற்றிய ஒரு முக்கியமான கேள்வியையெழுப்பினார். ஆரிய இனப் பெருமை பேச வெள்ளைக்கார மறை'ஞானி'கள் லெமூரியாக் கோட்பாடு பற்றி எழுதினர் என்றால், இன்றைய தமிழ்ப் பத்திரிக்கைச் சூழலில் ஏன் அது பற்றி எழுதுகிறார்கள்?

அண்மையில் பழந்தமிழகம் பற்றிய நூலொன்றைக் கண்டேன். அதில் மறைந்த கண்டம் பற்றிய 'ஆய்வு'க் கட்டுரைகளில் வேத விளக்கங்களும் புராணக் கதைகளும் பஞ்சாங்க ஆதாரங்களுடன் காவி நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. குமரிக் கண்ட ஆய்வாளர் ஒருவர், ஐந்திறம் நூலைப் பல ஆண்டுகளாக ஆராய்ந்து தமிழ் மொழி பற்றியும் தமிழர் பற்றியும் முக்கியமாக இந்துமதம் பற்றிய தகவல்களையும் கிரகித்துக் கொண்டிருப்பதாக ஓர் எழுத்தாளர் எழுதியதைக் காண நேர்ந்தது. பழந் தமிழகத்தில் (மறைந்த கண்டம் உட்பட) இருந்தவர்கள் அனைவருமே இந்துக்கள் என முன்கூட்டியே எடுத்த முடிவுக்கு இவர்களால் ஆதாரங்கள் தேடப்படுகின்றன.

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் புராணங்களையும் ஆகமங்களையும் துணைக்கு இழுத்து வந்து அறிவியலால் தெளிவு செய்யப்பட்ட கோட்பாடுகளை 'ஆராய்ந்து'கொண்டிருப்பதாகக் கூறும் கேலிக்கூத்தை நாம் பிறந்த மண்ணில் மட்டும்தான் காண முடியும்.

இந்தியாவின் பன்முகத் தன்மையிலும் மதச்சார்பின்மையிலும் ஜனநாயகத்திலும் அக்கறையுடையோர் கவனிக்க வேண்டியவை பற்றி எழுதிய அ. மார்க்ஸ் 'வெறுப்பை விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்' "இந்துத்துவவாதிகளின் பிரதான ஆயுதம் வரலாறு. வரலாற்றின் அடிப்படையில் அவர்கள் எதிரியை அடையாளப்படுத்துகிறார்கள். 'தேசியத்தை' வரையறுக்கின்றனர். தங்களின் நிகழ்கால அரசியலுக்குத் தோதாக ஒரு பழங்காலத்தைக் கட்டமைக்கின்றனர். அதன் மூலம் நிகழ்காலம் மட்டுமல்லாமல் பழங்காலமும் அவர்களின் வசமாகிறது" என்று குறிப்பிடுகிறார். இங்குதான் தமிழினத்தின் பழங்காலத்தை யார் கையிலெடுத்திருக்கிறார்கள் என்பதை உற்று நோக்க வேண்டும். 'பண்டைய இந்தியா' எனும் நூலில் உள்ள அபத்தங்களைச் சுட்டிக்காட்டும் மார்க்ஸ், 'நமது பழம்பெருமையைப் பீற்ற வேண்டும் என்பதற்காக வேத காலத்திலோ, சங்க காலத்திலோ கணிப்பொறிகள் இருந்தன என்று சொல்லிவிட முடியுமா? நாகரிகம் ஒன்றின் காலத்தைச் சொல்லும்போது அது பிற வரலாற்றுச் சம்பவங்கள், பிற துறை முடிவுகள் ஆகியவற்றுடன் பொருந்துகிறதா என்பதை அறிவது முக்கியம். ஏதோ ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு சில தரவுகளை மூடி மறைப்பது, வரலாறு எழுதியலின் அறமன்று' என்று கூறும் அவர், எழுதுபவரின் அறியாமையின் காரணமாகவோ, வேறெந்த நோக்கத்திலோ தவறான தகவல்களைத் தராமலிருப்பது முக்கியமானதொன்று என்றும், ஆதாரமற்ற விவரங்களை உறுதிபடச் சொல்லக் கூடாது என்றும் கூறுகிறார். ஆனால் இதைத்தான் பல மறைந்த கண்ட ஆதரவாளர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.

செவிவழிச் செய்திகள், ஐதீகங்கள், புராணங்கள், இலக்கியக் குறிப்புகள் ஆகிவற்றிற்குத் தம் மனம் போன போக்கில் கொடுத்த விளக்கங்களை ஆதாரமாகக் கொண்டு, தமிழ் நூல்களின் வரலாற்றுக் காலங்களைக் கணித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் ஆய்வுத் துறையில் முத்திரை பதித்தவர் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை. அவர் கண்ட முடிவுகளில், தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் ஆகியோரின் காலங்களை கி.பி.5ஆம் நூற்றாண்டிற்குப் பின்னாகக் குறிப்பிட்டதால் அவர் தூற்றப்பட்டார் என்றும், அவரது நிலைப்பாட்டை எதிர்த்தவர்கள் தக்க ஆதாரங்கள் காட்டி மறுக்காமல், உணர்ச்சிமயமான எதிர்வினைகளை எழுதினர் என்பதையும் முனைவர் அ.க. பெருமாள் (தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியாரின் கணிப்பு - 1983) சுட்டிக்காட்டுகிறார். 'தமிழ் இலக்கியங்களின் காலங்களைக் கணிக்கவந்தவர் எல்லோரும் வையாபுரியாரின் காரணங்களை அறிவுபூர்வமாக மறுக்காது, முத்திரை குத்திப் பழித்துவிட்டு, தமிழ் நூல்களைத் தொன்மையான காலத்திற்குத் தள்ளித் திருப்திப்பட்டுக்கொள்ளும் நிலையைத் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் பரக்கக் காண்கிறோம்' என்கிறார் பெருமாள்.

குமரி நிலநீட்சி பற்றிய என் கணிப்புகளும் இதே போன்ற, ஆனால் நான் எதிர்பார்த்ததைவிடக் குறைவான எதிர்ப்புகளை, எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. காரணம், வையாபுரியாரின் காலக் கணிப்புகள் வந்த காலத்திற்கும் இக்காலத்திற்கும் உள்ள வேறுபாடுகள். இன்று கோட்பாடுகளின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்வியெழுப்பும் அறிவியல் நாட்டம் கொண்ட இளைய தலைமுறையினர் இருப்பது; தகவல் துறையின் முன்னேற்றத்தால் அண்மைக் கால ஆய்வுகள் பற்றிய பரவலான புரிதலிருப்பது; விழிப்புணர்வு கொண்ட பகுத்தறியும் வாசகர்களின் எண்ணிக்கை பெருத்திருப்பது போன்றவை அன்றில்லாதவை. லெமூரியா மறைந்த கண்டம் பற்றிய என் கருத்துகளை ஏற்றுக் கொள்வது கடினமாகயிருப்பது தன்னின உயர்வுவாதம் பேசும் ஒரு சிறு விழுக்காட்டினருக்கே.

தன்னின உயர்வுவாதமே பிரிவினைகளுக்குக் காரணம். இப்படித்தான் ஒரு காலத்தில் சீனர்களும் அவர்களே உலகின் மூத்த குடியினர் என்றும் அவர்கள் வாழும் பகுதியே உலகின் மையம் என்றும் நம்பினர். ஆனால் அது அறிவியல் காட்டும் உண்மையல்ல என்பதைச் சீனச் சிந்தனையின் மறுமலர்ச்சிக் காலத்திலேயே உணர்ந்தனர். ஒருசாரார் அடுத்தவரைவிட உயர்ந்தவர் என்று எண்ணுவதாலேயே சாதி, இன, மதச் சண்டைகள் உருவாகின்றன.

தமிழர்தான் மூத்த குடியென்பதும் தன்னின உயர்வுவாதம்தான். ஒரு லட்சம் ஆண்டுகட்கு முன், ஆதி மனிதர் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி உலகெங்கிலும் வியாபித்தனர்; அவர்களே நம் முன்னோர்கள் என்ற அறிவியலால் தெளிவான உண்மையை, இந்தத் தன்னின உயர்வுவாதிகளால் செரிக்க முடியாது என்பது வேறு விஷயம். தமிழர் நாகரிகம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முற்பட்டது என்று ஓர் 'இலக்கியவாதி' கூறினால் அதை நம்புவதுதான் தமிழ்ப் பற்றின் அடையாளமாகக் கருதப்படும் நிலை நீடிக்க வேண்டுமா, அல்லது மானிடவியல், தொல்லியல் ஆகியவற்றின் அண்மைக் கால ஆய்வுகளின் முடிவு என்ன என்பதை அறிந்து, இந்தத் தேங்கிய நிலையை மாற்ற வேண்டுமா என்பதைப் பகுத்தறிய விழையும் வாசகர்கள்தான் தீர்வு செய்ய வேண்டும்.

நன்றி: காலச்சுவடு.காம்

Tuesday, April 21, 2009

நூல் அறிமுகம்



Krishna weds Kavitha

உணவே மருந்து

(உணவும் மருந்தும்)

டாக்டர் எல். மஹாதேவன், விலை: ரூ. 125

தெரிசனங்கோப்பு ஸ்ரீ சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் மருத்துவக் குழு உதவியுடன் டாக்டர் எல். மஹாதேவன் எழுதியுள்ள இந்த நூலில், அன்றாட வாழ்விற்குப் பயன்படும் சாதம், குழம்பு, ரசம், துவையல், பச்சடி, தொக்கு, ஜூஸ், கஞ்சி போன்ற பழமை மாறாத மருத்துவக் குணமுள்ள உணவு வகைகள் 18 தலைப்புகளில் தெளிவான செய்முறைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

“இந்நூலின் நோக்கம், நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துகள், மருந்துகள், பயன்கள் பற்றிப் பேசுவது. உடலில் எந்தக் குறைபாட்டுக்கு அல்லது நோய்க்கு என்ன உண்ண வேண்டும் எனும் அரிய தகவல்கள் அடங்கியது” என்கிறார் முன்னுரையில் நாஞ்சில் நாடன்.


மேலும் விவரங்களுக்கு: http://www.kalachuvadu.com

காலத்தின் கட்டாயம்

- முனைவர் இர.வாசுதேவன், M.A.,M.Phil.,Ph.D.

தமிழர் பண்பாடு அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வகை ஒழுக்கங்களைக் கொண்டது. ஒழுக்கங்களுக்கு முதலாக இருப்பது, இன்பமாகும். மனித வாழ்வு இன்பமுடனிருக்க வேண்டும். உடல் நலமும் உள நலமும் செம்மையாகப் பேணப் பட வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு உருவானது, தமிழ் மருத்துவம்.

தமிழ் மருத்துவம் தொன்மையானது என்பதற்குச் சிந்துவெளி முத்திரைகள், தொல்காப்பியம், சங்க இலக்கியம், ஐம்பெருங் காப்பியம், திருக்குறள் பொன்றவை சான்றாக அமைந்துள்ள. அவற்றில், மருத்துவக் குறிப்புகளும், நோய் பற்றிய செய்திகளும், மருத்துவம் பற்றிய குறிப்புகளும், மூலிகைகளும் காணப்படுகின்றன.

சங்க காலத்தில் தோன்றிய மருத்துவத் தனி நூல் எதுவும் கிடைக்க வில்லை.என்றாலும், சங்க காலப் புலவரால் இயற்றப் பெற்ற ஆற்றுப்படை என்னும் மருத்துவ நூலின் ஒரு பகுதி கிடைத்துள்ளது. சங்க காலத்தில் மருத்துவ நூல்கள் தோன்றின என்பதற்குச் சான்றாகிறது. சங்க காலத்தில் ‘கலைக்கோட்டுத் தண்டார்’ என்னும் முனிவர் இருந்திருக்கிறார். அவர், ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூலை இயற்றியிருக்கின்றார். அந்த சுவடி, ஜெர்மனி நாட்டிற்குச் சென்றிடுக்கிறது. அதன்பின்னால், ஜெர்மனி மருத்துவத் துறையில் முன்னிலைப் பெற்றுள்ளது! என்று, ஜெர்மனி நாட்டுத் தமிழரிஞர் கருத்து தெரிவிக்கிறார். ஆனால், அம்முனிவர் எழுதிய நூலின் ஒரு பகுதி கூட நமக்குக் கிடைக்கவில்லை.

கலைக்கோட்டு முனிவர் நூலைப் பார்த்து, பல நூல்கள் இயற்றினேன்! என்கிறார். போகர்.
அதைப்போல், நாடு கடந்து சென்ற சுவடிகள், 87 நாடுகளின் நூலகங்களில் இருக்கின்றன.
சிலப்பதிகாரத்தில் அரைப்பு முறையால் செய்யும் மருந்துகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அவை,

சந்தான கரணி - முரிந்த உறுப்புகளை ஒட்டுவது.
சல்லிய கரணி - வேல் தைத்த புண்ணை ஆற்றுவது.
சமனிய கரணி - புண்ணின் தழும்பை மாற்றுவது.
மிருத சஞ்சீவினி - இறந்த உடலை உயிர்க்கச் செய்வது.

ஆனால், இம்மருந்துகளைப் பற்றிய குறிப்புகள், எந்த மருத்துவ நூலிலும் காணவில்லை.

தமிழ் மருத்துவ மரபைத் தோற்றுவித்தவர் திருமூலர். திருமூலர் இயற்றிய ‘எண்ணாயிரம்’ என்னும் நூல் கிடைத்தில. வடலூர் வள்ளலார், அந்நூல்லின் அருமை பெருமையை வியந்து போற்றுகிறார். எந்த நூலும் எண்ணாயிரத்துக்கு ஈடில்லை! என்கிறார். தருமையாபுர ஆதினத்தின் சுவடி நூலகத்தில் “எண்ணாயிரம்” நூல் இருந்ததைக் கண்டதாகவும், சில காலங்களுக்குப் பின்னர் அந்நூலைத் தேடிச் சென்ற போது, ஆங்கே அந்நூல் இல்லை! என்றும், தமிழ்த் தாத்தா உ.வே.சா குறிப்பெழுதியுள்ளார்.
எண்ணாயிரம் என்னும் நூல் ஒன்றே தமிழ் மருத்துவத்துக்கு மூல நூலாக இருந்திருக்க வேண்டும். அதன் சிறப்பினாலேயே அது காணாமற் போயிருக்க வேண்டும்.

முல்லை நிலத்துச் சித்தராகிய இடைக்காடர், அரியவகை மருந்துகளைக் கூறியுள்ளார். அச்செய்தி, உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள மேற்கோள் களிலிருந்து கிடைக்கிறது. ஆனால், இடைக்காடர் இயற்றிய தனிநூல் ஒன்றையும் காணோம்.

அதேபோல்,
அகத்தியர் - 81000,
அகத்தியர் - 51000,
அகத்தியர் - 30000,
அகத்தியர் - 21000,
அகத்தியர் - 18000,
அகத்தியர் - 8000,
பரஞ்சோதி - 8000,
கோரக்கர் வெண்பா,
மச்சமுனி கலிப்பா,
சங்கர மாமுனி கிரந்தம்,
மாபுராணம்
போன்ற நூல்கள் தமிழ் மருத்துவத்துக்கு ஆதாரமாக இருந்துள்ளன. அவற்றிலிருந்து ஒரு சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூல்கள் சமஸ்கிருதத்திற்கு மொழிக்கு மாற்றம் செய்யப் பட்டிருக்கின்றன. அவ்வாறே மங்கோலியம், திபெத்தியம், அரபி, தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளுக்கும் சென்றுள்ளன. அவை, தமிழ் நூல்களாகவே வழங்கி வருகின்றன என்பது வருத்தத்துக்கு உரியது.

தமிழ் மருத்துவத்தின் ஒரு பிரிவாகிய வர்ம மருத்துவத்தின் மறு வடிவமாகியிருக்கிறது, சீன மருத்துவம்.

வடக்கிலுள்ள நாலந்தா பல்கலைக் கழகம், ஆயுர்வேத பல்கலைக் கழகம், சமஸ்கிருத கல்லூரிகள் ஆகியவற்றிலுள்ள உள்ள நூல்களில் செம்பாதி தமிழ் நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நூல்களை மொழிமாற்றம் செய்தவர்கள், தமிழ் மொழிப் புலமை யில்லாமல் செய்த பிழைகளை தேரையர் என்னும் சித்தர் கேளி செய்திருக்கிறார். இதிலிருந்து, மொழித்திருட்டு வெளிப்பட்டிருக்கிறது.
இலங்கை இராவனேஸ்வரன் நூலகத்திலிருந்து திருடி வரப்பெற்ற நூலைப் பார்த்து மருத்துவ நூல் இயற்றப்பெற்ற தாக, இரச சாஸ்திரம் என்னும் சமஸ்கிருத நூல் குறிப்பிடுகிறது.

தமிழ் மருத்துவ நூல்கள், செய்யுள் வடிவாக இருந்தாலும் அவை தமிழ் இலக்கிய வடிவங்களாகவே இருப்பது போற்றுதற்குரியது.

உதாரணமாக, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, நொண்டி, சிந்து, கும்மி, பள்ளு, காவியம், காப்பியம், சிந்தாமணி, சூடாமணி, கல்லாடம், திருமந்திரம், சதகம், கரிசல், பிள்ளைத் தமிழ், உலா, பாரதம், நிகண்டு, திருப்புகழ், கோவை, தண்டகம், வாகடம், சூத்திரம், திறவுகோல், சுரிதகம் என்று பலவடிவங்களைக் குறிப்பிடலாம்.

தமிழ் மருத்துவச் சுவடிகளைத் திரட்டும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றுள்,கீழ்க்கண்ட நிறுவனங்கள் தமிழ் மருத்துவச் சுவடிகளைத் திரட்டியுள்ளன.

தமிழ்ப் பல்கலைக் கழகம் - 5000
சரசுவதி மஹால் நூலகம் - 396
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் - 270
சித்த மருத்துவ மேம்பாட்டுக் குழு - 478
உஸ்மான் கமிட்டி - 594
உ.வே சாமிநாதர் நூலகம் - 15
விருத்தாசலம், வீர சைவ மடம் - 15
பாண்டிச் சேரி, பிரஞ்சு- இந்திய கலைக்கூடம் 80
மதுரை, தமிழ்ச் சங்கம் - 24
திருவனந்தபுரம் கீழ்த்திசை சுவடி நூலகம் - 165
சென்னை, கீழ்த்திசை சுவடி நூலகம் - 579

இவையல்லாமல், தமிழகத்திலுள்ள சைவ வைணவ மடாலயங்கள், கோயில்கள், மருத்துவ மனைகள், மருத்துவர்களிடம் நூற்றுக் கணக்கான சுவடிகள் இருக்கின்றன.

இத்தனைச் சுவடிகள் இருந்த போதிலும், தமிழ் மருத்துவம் நிறைவு பெற்ற மருத்துவ முறைகளைக் கொண்டதாகக் கூற முடியவில்லை. காரணம்,

(உ.வே.சா போன்ற) தமிழ்ச் சான்றோர்கள் தமிழ் நூல்களைத் திரட்டியது போல, மருத்துவ நூல்களைத் திரட்ட முன் வந்தது போல, மதுரை காமராஜர் பல்கலைப் பேராசிரியர்களும் மாணவர்களும் ஒன்று திரண்டு, தமிழகத்தின் இல்லங்கள் தோறும் சென்று சுவடிகளைக் கண்டறியும் பணியை மேற்கொண்டனர். அவர்கள், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று சுவடிகள் பற்றிய கணக்கெடுப்பு நிகழ்த்திய போதில், பலரிடம் அரிய சுவடிகள் இருப்பதை அறிவிந்துள்ளார்கள். அவர்கள், சுமார் ஒன்பது இலட்சம் ஓலைச் சுவடிகளைக் கணக்கெடுத்துள்ளார்கள். அச்சுவடிகளில் தமிழ் மருத்துவத்தைத் தலை நிமிரச் செய்யும் அரிய முறைகளைக் கொண்ட நூல்கள் இருக்கக் கூடும். ஆனால், அவற்றைக் கையகப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாதிருப்பது வருத்தத்திற்கு உரியதாக இருக்கிறது.

மூட்டையில் கட்டி மூலையில் வைத்தால் தங்கமே ஆனாலும் என்ன பயன்? ஆகவே,
தமிழ் மருத்துவம் சிறப்படைய வேண்டுமானால், கீழ்க்கண்ட செயல்கள் நடைபெற வேண்டும்.

கி.பி 1927 க்கு முன் சித்த மருத்துவம் என்னும் பெயர் வழங்கப்படவில்லை. மருத்துவம் என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆகவே, சித்த மருத்துவம் என்னும் பெயரை ‘தமிழ் மருத்துவம்’ என்று, வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.

தமிழ் மருத்துவத்தில் மூல மருந்தாகப் பயன் படுத்தப்பட்ட கற்பம், சரக்குகள், பாடாணங்கள், மூலிகைகள் ஆகியவற்றில் பல அடையாளம் காணப் படவில்லை.

மூலிகைகளைப் பாதுகாக்கும் பணியில் தமிழகத்து கோயில்களும் ஈடுபட்டிருக்கின்றன. கோயில்களில், ஸ்தல் விருட்சம் என்று கூறப்படுகின்ற கோயில் தாவரங்கள், அரியவகை மூலிகை இனமாகும். அவை நூற்றுக் கணக்கான ஆண்டுகள் முதிர்ந்த நிலையில் உள்ளன. அவை, பிற தாவர இனங்களின் பண்பிலிருந்து மாறுபட்டவை. (அவ்வாறு உள்ள 124 தாவரங்களை எனது ஆய்வேட்டில் பட்டியலிட்டுள்ளேன்) அவற்றை ஆராய்வது தமிழ் மருத்துவத்துக்கு உகந்ததாக இருக்கும். மூன்றே பொருளால் ஆனது அண்டம், பிண்டம், சீவன், வாதம், நோய், மருந்து என்பதன் உட்பொருள் ஆராயப்படவில்லை. முப்பு என்பதும் குரு மருந்து என்பது என்னவென்று தெரியவில்லை.

சுவடி வடிவத்திலிருந்து நூல்வடிவம் பெற்ற நூல்களில், பல, பொருள் விளங்காமல் செய்யுள் வடிவிலேயே இருக்கின்றன. பல நூல்கள் பிழையாகப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. ஒரே நூல் வெவ்வேறு பெயரில் வெளியாகியுள்ளது. ஒரு நூலின் பகுதிகள் வேறு ஒரு நூலின் பகுதியாக அமைந்துள்ளது. இச்செயல்கள், தமிழ் மருத்துவ வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.

இந்தியாவில் ஆயுர் வேதக் கல்விக்காக மொத்தம் 196 பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் இருக்கின்றன என்பது வியப்பளிக்கிறது.

அயல் நாடுகளிலும் 6 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.

சித்த மருத்துவக் கல்லூரிகளாக இருப்பவை மொத்தம் - 12.
அவற்றில் தனியார் கல்லூரிகள் 10, அரசுக் கல்லூரிகள் 2.

இந்தியாவிலுள்ள ஆயுர்வேதப் பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் திரட்டிய மருத்துவ நூல்கள் அனைத்தையும் ஆராய வேண்டும். ஆங்குள்ள தமிழ் மருத்துவ நூல்களை அடையாளம் காண வேண்டும்.

அண்ணா சித்த மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ள ஆயுர் வேதம் - தமிழ் மொழி பெயர்ப்பு நூலை ஆராய வேண்டும். அதன் மூலம், தமிழ் மருத்துவ நூல்கள் ஆயுர்வேதமாக மாற்றப்பட்டுள்ள உண்மை வெளிவரும்.

தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தமிழ் மருத்துவ நூல்களைத் திரட்டும் பணிக்குழு நியமிக்க வேண்டும். பதிப்பிலுள்ள நூல்களைத் தொகுக்க வேண்டும்.

வட மொழிக்கும் / ஆயுர் வேதத்துக்கும் இருப்பதைப் போல, தமிழ் மருத்துவத்துக்கு ஒரு பல்கலைக் கழகம் நிறுவ வேண்டும்.

தமிழ் மருத்துவ மாநாடுகள், கருத்தரங்குகள் நடைபெற வேண்டும். புதிய புதிய மருத்துவ முறைகளைக் கண்டறிய பரம்பரை மருத்துவர், குடும்ப முறை மருத்துவர் (பாட்டி வைத்தியம்) ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும்.

தமிழ் மருத்துவத்தில் மாட்டு வைத்தியம் சிறப்படைய வில்லை. ஆனால், சிறந்த மாட்டு மருத்துவர்கள் தமிழகத்தில் இருக்கின்றார்கள். அவர்களைக் கண்டறிந்து மருத்துவ முறைகளைத் திரட்ட வேண்டும். சரசுவது மஹாலில் நூற்றுக் கணக்கில் மாட்டுவாகட நூல்கள் இருக்கின்றன. ஆனால், அவை பதிப்பில் வெளிவர முயற்சி செய்ய வேண்டும்.

மலைவாழ் இன மக்களிடம் அரிய மருத்துவ முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. அவர்களிடமிருந்து அம்முறைகளைக் கற்க வேண்டும்.

ஆயிரக்கணக்கில் மருத்துவச் சுவடிகள் இருக்கின்றன. என்றாலும் அவை பதிப்பிக்கப் படாமல் சுவடியாகவே இருக்கின்றன. அவற்றைப் பதிப்பிக்க குழு அமைக்க வேண்டும்.

நிலம் கடந்து / நாடு கடந்து சென்ற சுவடிகளைக் கண்டறிந்து, அவற்றை மீட்டெடுக்க முயல வேண்டும்.

படைப்பாளர்கள் தங்கள் முயற்சியினால் படைக்கப் படுகின்ற நூல்கள், 50 ஆண்டுகள் நிறைவடைந்தால் அந்நூல்கள் பொதுச் சொத்தாகி விடுகின்றன. அதைப் போல, தனியாரிடம் உள்ள ஓலைச் சுவடிகள் அனைத்தும் அரசுச் சொத்து என அறிவிக்க வேண்டும். தங்களிடமிருக்கும் சுவடிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்காமல் இருப்பதும், அழிப்பதும், மறைப்பதும் குற்றமாக அறிவிக்க வேண்டும்.

சிறந்ததும் அரியதுமாகிய மருத்துவச் சுவடிகளையோ மருத்துவ முறைகளையோ அளிப்போர்களுக்கு ஏற்ற சன்மானம் அளிக்க வேண்டும்.

பிற துறைகளில் சிறந்தவர்களைச் சிறப்பு செய்வது போலத், தமிழ் மருத்துவத் துறையில் சிறந்தவர்களுக்கு ஆண்டு தோறும் விருது அளித்து சிறப்பு செய்ய வேண்டும்.

தமிழ் மருத்துவம் பயிலும் மருத்துவர்களுக்குச் சுவடிகளைப் படிக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு தமிழ் மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ் மருத்துவ இலக்கியத் துறை நிறுவ வேண்டும். ஒவ்வொரு கல்லூரியும் சுவடிகளை ஆராய்தல், மருந்துகளை ஆராய்தல், நூல்களைப் பதிப்பித்தல் போன்ற பணிகளைச் செய்ய உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தின் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் சுவடிகளைத் திரட்ட குழு அமைக்க வேண்டும். அறிவிப்புகள் வெளியிட வேண்டும். கிராம சுகாதார அதிகாரிகள், கிராம வருவாய்த்துறை அதிகாரிகள் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகியோரைப் பயன் படுத்தி, சுவடிகளைத் திரட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும். திரட்டும் சுவடிகள் நூல்வடிவாகத் திட்டமிடல் வேண்டும். பதிப்பித்த நூல்களில் காணப்படும் மருத்துகளை ஆய்வு செய்து வெளியிட வேண்டும். மேற்கண்ட பணிகளை ஆற்றுகின்ற முனைப்பும் திறமும் நம்மிடம் இருக்கின்றன. வேண்டிய நிதி ஆதாரமும் ஊக்கமும் அளிக்க மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும்.

பொருப்பிலிருப்பவர்கள் உரிய பணிகளைச் செய்ய முன்வருவார்கள் என நம்புகின்றோம்.

“தமிழில் மருத்துவ இலக்கியங்கள்” என்னும் புதிய வடிவங்களை, ஆய்வு செய்த வேளையில், “இந்திய மருத்துவ அறிவியல், கணிதம், வானவியல் போன்ற மரபுகளுக்கெல்லாம் ஆதாரமாகத், ‘தமிழ் மரபு’ விளங்குகின்றது! என்பதை நிறுவ கிடைக்கப்பெறும் ஆவணச் சான்றுகளைத் தங்கள் பார்வைக்குக் கொண்டுவர விழைகின்றேன்.

தமிழ் மருத்துவத்தின் வளர்ச்சி, தமிழ் மருத்துவத்தின் பாதுகாப்பு ஆகியவற்றுக்குரிய சிறப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. தற்போதுள்ள தமிழ் மருத்துவத்தின் துறைப்பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்பது எனது பரிந்துரையாகும்.

தமிழ் மருத்துவம், பண்டைய காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பழந்தமிழ் மருத்துவப் பாடல்கள் ஒரு சில கிடைத்தாலும் அதன் மருத்துவ நூல்கள் கிடைத்தில. சங்க காலத்து ‘கலைக்கோட்டுத் தண்டார்’ என்னும் முனிவர் இயற்றிய ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட நூல் இருந்ததற்கான சான்றும், அந்நூல் ஜெர்மனி நாட்டிற்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு, தமிழ் மருத்துவச் சுவடிகளும் தமிழ் இலக்கியச் சுவடிகளும் சுமார் 87 நாடுகளின் நூலகங்களில் இருப்பதாக, உலக நாடுகளின் நூலக ஆய்வு தெரிவிக்கிறது.

மருத்துவ நூல் உரையாசிரியர்கள் மேற்கோளுக்காக எடுத்தாண்டுள்ள இடைக்காடர் மருத்துவம், அகத்தியர் - 81 000, அகத்தியர் – 51 000, அகத்தியர் 30 000, அகத்தியர் 21 000, அகத்தியர் 18 000, அகத்தியர் 8 000, பரஞ்சோதி 8 000, கோரக்கர் வெண்பா, மச்சமுனி கலிப்பா, சங்கரமுனி கிரந்தம், மாபுராணம் போன்றவை தமிழ் மருத்துவத்துக்கு ஆதாரமாக இருந்துள்ளன. இது, மேற்கோளுக்காகக் எடுத்துக் காட்டப்பட்டுள்ள பாடல்களினால் தெரியவருகிறது.

தமிழ் மருத்துவ மரபைத் தோற்றுவித்தவர் எனக் கருத்தப்பெறும் திருமூலர் இயற்றிய ‘எண்ணாயிரம்’ என்னும் நூலின் அருமையை வடலூர் வள்ளலார் போற்றுகிறார். தருமையாபுர ஆதினத்தின் சுவடி நூலகத்தில் ‘எண்ணாயிரம்’ என்னும் நூல் இருந்ததைக் கண்டதாக, உ.வே.சா. குறிப்பெழுதியுள்ளார்.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூல்கள் சமஸ்கிருதத்திற்கும் மங்கோலியம், திபெத்தியம், அரபி, மலையாளம், தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளுக்குச் சென்றுள்ளன. அவை, இன்றும் தமிழ் நூல்களாகவே வழங்கியும் வருகின்றன.

வடக்கிலுள்ள நாலந்தா பல்கலைக் கழகம், ஆயுர் வேத பல்கலைக் கழகம், சமஸ்கிருத கல்லூரிகள், கேரளாவில் வழங்கி வருகின்ற ஆயுர் வேத கல்லூரி ஆகியவற்றில் வழங்கி வருகின்ற மருத்துவ நூல்களில் செம்பாதி தமிழ் நூல்கள் என்பது குறிப்பிடத் தக்கது. வடமொழியிலுள்ள இரச சாஸ்திரம், இராவணன் நூலகத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற நூலைப் பார்த்து எழுதியதாகத் தெரிவிக்கிறது.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டளவில் குமரி, திருவனந்தபுரம் பகுதியில் வழங்கி வந்துள்ள ‘சிந்தாமணி மருத்துவம்’ என்னும் ‘இராவணன் மருத்துவ நூல்கள்’ அனைத்தும் திருவிதாங்கூர் மன்னரின் தூண்டுதலினால் திரட்டப் பட்டுள்ளன. அவை, நொய்யாற்றங்கரை என்னும் ஊரில் நிறுவப்பட்டிருந்த ‘தமிழ் மருத்துவ ஆய்வு மையம்’ என்னும் அமைப்பின் மருத்துவர்களும் வர்ம ஆசான்களும் அகத்தியர் பெயரில் மலையாள மொழியில் மொழிமாற்றம் செய்துள்ளனர்.

அந்நூல்களின் உதவியினால் உருவாக்கப் பட்டதே ‘ஆயுர் வேத மருத்துவம்’ ஆகும்.
இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம் வருமாறு:-

1. உடற்கூறு நூல்
2. மலை வாகடம்
3. மாதர் மருத்துவம்
4. இராவணன் – 12000
5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6. இராவணன் வைத்திய சிந்தாமணி
7. இராவணன் மருந்துகள் - 12000
8. இராவணன் நோய் நிதானம் - 72 000
9. இராவணன் – கியாழங்கள் – 7000
10. இராவணன் வாலை வாகடம் – 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
14. யாழ்பாணன் – பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் – 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்

என்பன.

மேற்காணும் நூல்களில் பல, சங்கரன் கோயில் அருகிலுள்ள ‘கரிவலம் வந்த நல்லூர்’ என்னும் ஊரில் அமைந்துள்ள ‘பால் வண்ண நாதன்’ திருக்கோயிலில் கருவூலமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராவணன் நூல்களில் ஒன்றான “இராவணன் திராவக தீநீர்” என்னும் நூல், அர்க்க பிரகாசம் என்னும் பெயரில் மலையாளத்தில், சுமார் 180 ஆண்டுகளுக்கு முன் வெளியாகியிருக்கிறது. (அந்நூல் என்னிடம் இருக்கிறது)

“இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து சித்த மருத்துவம்” (திசம்பர் 2000)
ஆசிரியர். Dr. சே.சண்முகராஜா M.D. (Siddha)
சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம்,
கந்தரோடை, சுன்னாகம், இலங்கை.

என்னும் நூல், சித்த மருத்துவத்தின் தாயகமாக இலங்கையில் யாழ்ப்பாணம் விளங்குகிறது என்றும், இராவணன் இயற்றிய நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை என்றும், சிங்கள மொழியில், இராவணன் இயற்றிய நூல்களில் சில வழக்கில் இருந்து வருகிறது! என்றும் குறிப்பிடுகிறது. மேலும், 15 ஆம் நூற்றாண்டளவில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட “வைத்திய சிந்தாமணி பைசாஜ்ஜ சங்கிரகம்” (Vaidya Cintamani Bhaisadya Sangrahava) என்னும் சிங்கள மருத்துவ நூல், இராவணன் வைத்திய சிந்தாமணி என்னும் தமிழ் மருத்துவ நூலைத் தழுவி எழுதப்பட்டதாகும்! என்றும் குறிப்பிடுகிறது.

இந்தியில் “இராவண சம்ஹிதா” என்னும் மருத்துவ நூல் இராவணன் படத்துடன், மனோஷ் பப்ளிகேஷன், புதுதில்லி – 110084 லிருந்து வெளிவந்துள்ளது. அது, சுமார் 830 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது.

தமிழில் வழங்கி வந்துள்ள சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் போன்றவை உ.வே.சா. போன்றவர்களால் சேகரிக்கப் பட்டன. ஆனால், மருத்துவக் கலைநூல், 64 வகை கலை நூல்கள், நிகண்டு, வானியல், கணிதம், வர்ம நூல்களும் சேகரிக்கப் படவில்லை.
விலங்கு, பறவை மருத்துவம், மருத்துவம் சார்ந்த அறிவியல் சுவடி நூல்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில், திருவனந்தபுரம் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் மிகுதியாக இருக்கின்றன.

மைய அரசின் பண்பாட்டுத் துறையின் தேசிய ஓலைச் சுவடிகள் மையமும் தமிழ் நாடு அரசும் இணைந்து நட்த்திய கணக்கெடுப்பில் (பிப்ரவரி, 2006) நெல்லை மாவட்டத்தில் மட்டும் இரண்டு இலட்சம் சுவடிகள் இருப்பதாக்க் கண்டறியப்பட்டுள்ளது. சங்கரன் கோயில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முப்பதாயிரம் சுவடிகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் தமிழ் மருத்துவ முறைகள் ஓலைகளிலும் பிற மொழிகளிலும் மறைந்து கிடக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ் மருத்துவம் சிறப்படையவும், தமிழ்க் களஞ்சியத்தை மீட்டெடுக்கவும் வேண்டும். அதற்குக் கீழ்க்காணும் பணிகளைச் செயலாக்க வேண்டும்.

1. தமிழகத்திலுள்ள தமிழ் மருத்துவச் சுவடிகளைத் திரட்டும் பணியை மேற்கொண்டு, அவற்றை ஆவணப் படுத்திப் பட்டியலிட வேண்டும்.
2. அரிய நூல்களைப் பதிப்பித்து உரையுடன் வெளியிட வேண்டும்.
3. தமிழகத்திலும் இலங்கையிலுமுள்ள இராவணன் நூல்களைத் திரட்டி வெளியிட வேண்டும்.
4. பிற மொழிகளிலும் பிற நாடுகளிலும் உள்ள மருத்துவ நூல்களைப் படியெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
5. பரம்பரை மருத்துவர்களிடமுள்ள எழுத்து வடிவம் பெறாத மருத்துவ முறைகள், மலைசாதி வகுப்பினரிடமுள்ள மருத்துவ முறைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து திரட்ட வேண்டும்.

மேற்காணும் பணிகள் அனைத்தும் செம்மையாக நடைபெற, தமிழ் மொழிக்கு வலுவூட்ட “ தமிழ் மருத்துவ இலக்கிய ஆவணத்துறை & ஆய்வுத்துறை” நிறுவுதல் காலத்தின் கட்டாயமாகும்.


நன்றி: தமிழ் மருத்துவம்


நூல் விமர்சனம்

தமிழில் மருத்துவ இலக்கியங்கள் - ஓர் ஆய்வு
- ஆர். பார்த்தசாரதி

சென்னைப் பல்கலைக் கழக முனைவர் பட்டத்துக்காகப் புலவர் இர. வாசுதேவன் எழுதிய ஆய்வுரை இந்நூல்.

தொடக்கத்திலேயே ஓருண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். அதாவது தமிழ் மருத்துவம் எனக் கருதப்படும் சித்த மருத்துவம் பற்றிய இலக்கியங்கள் குறித்த ஆய்வு என்பதோடு மட்டுமமையாமல் சித்த மருத்துவத்தின் பல்வேறு கூறுகளை இந்நூல் விளக்குகிறது. பல வகைகளில் இதனை இருபத்து ஓராம் நூற்றாண்டில் எழுந்த சித்தமருத்துவ முதல் நூல் எனக் கருதலாம்.

தமிழில் “சித்தர்” என்னும் சொல் ஏறத்தாழ 15 நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்து வந்துள்ளது. சித்தர் என்ற சொல்லுக்கு இயற்கை இகந்த செயல்பாடு, அற்புதம், மனநிறைவு, திடமனம் எனப் பல பொருள் உண்டு. அதாவது மனிதன் புறத்தே உள்ள பொருள்களை மட்டுமல்லாமல் தன் அகத்தே உள்ள மனத்தையும் அடக்கிக் கட்டுப்படுத்தி, மனித சக்திக்கு அப்பாற் பட்ட செயல்களைச் செய்து முடிப்பவர். தமிழில் “அபிதான சிந்தாமணி” கூறுவது போல முதலில் நவசித்தர்கள் இருந்தார்கள். பின்பு பதினெட்டு சித்தர்கள் ஆனார்கள். காலப் போக்கில் நூற்றுக்கணக்கானோர் சேர்க்கப்பட்டனர். இராமலிங்கர், மகாகவி பாரதியாரும் சித்தர் எனக் கருதப் பெற்றனர்.

தமிழகத்தில் கதிரவனின் ஒளிக்கற்றைகள் புகமுடியாத மலைகளில், குகைகளில், கானகங்களில் சித்தர்கள் வாழ்ந்திருந்ததாக தவமிருந்ததாக நம்பப்படுகிறது. எனவே பொதுவாகச் “சித்தர்கணம்” என்னும் சொல்லாட்சி தமிழில் இடம்பெற்றது. வித்தகச் சித்தர் கணத்துக்கு வாய்த்த அளப்பரிய வலிமை பற்றித் தாயுமானவர் பல பாடல்களில் எடுத்துச் சொல்லியுள்ளார்.

சித்தர் எனப்படுவோர் இந்திய நாடு கண்ட சமணம், பௌத்தம், சைவம் என்னும் சமயங்களில் சிறப்பான இடம் பெற்றுள்ளனர். புத்தர் “சித்தர்” எனப்பட்டார். சமண சமயத்தில் துறவில் மிக உயர்ந்த நிலை அடைந்தவர்களைச் சித்தர், ஆரூகதர்கள், பரமேட்டிகள் என்றனர். சைவத்தில் சிவனைச் சித்தன் எனக் குறிப்பிடுவதும் உண்டு. எனவே “சித்தர் சிந்தனை” இந்தியர், தமிழர்களுக்குப் பொதுவானது எனலாம். இதற்கு நிகராக இஸ்லாமில் சூபி இயக்கமும் கிருத்துவத்தில் மெய்ஞானிகளும் இருந்ததாகக் கூறுவர்.

சித்தர்கள் நம் நாட்டில் குறிப்பாக, தமிழகத்தைப் பொறுத்தவரை மூவகையாகப் பிரித்து பார்க்கப்படுகின்றனர். முதலாவதாக, இறை நம்பிக்கையில் ஊறித் திளைத்து மனநிறைவு பெற்றவர்கள். இரண்டாவதாக சித்தத்தைச் சிவன் பால் செலுத்திய போதிலும் இயற்கையை எதிர்த்துப் போராடி இயற்கையை வசப்படுத்தி மனித சமூகத்தின் நல்வாழ்வுக்காக இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தியவர்கள். மூன்றாவது இயற்கையை எதிர்த்துப் போராடும் போது கடவுள் நம்பிக்கையில் ஈடுபடாது பொருள் முதல்வாதிகளாக இலங்கியவர்கள்.

இம்முப்பிரிவுகளிலும் மருத்துவர்கள் உண்டு. இந்தப் பாகுபாட்டினை மிக விரிவாக ஆராய்ந்து விளக்கமாக எடுத்துக் கூறுவது இந்நூல். மரபு வழிப்பட்ட இறுக்கமான வைணவமும், சைவமும் அதாவது விசிட்டாத்வைதமும் சைவச்சித்தாந்தமும் சித்தர்களை ஏற்றுக் கொண்டதில்லை. வைதிக சமயங்கள் இவர்களைப் புறத்தவர்களாக, மரபு வழுவியவர்களாக ஒதுக்கி வைத்து வந்துள்ளன. இருப்பினும், புத்தசமயம் வைதிக சமயங்களை ஊடுருவியதோடு அவை மக்களிடையே செல்வாக்குக்குப் பெறச் “சித்த சிந்தனை உணர்வு” காரணம் என்னும் உண்மையைப் பல கோணங்களிலிருந்தும், பல நிலைகளிலிருந்தும் ஆராய்ந்து ஆசிரியர் நிலை நாட்டுவது பாராட்டத்தக்கது.

உலகாயதம் எவ்வாறு சாதாரண மக்களுடைய நல்வாழ்வுக்குத் தேவையான வேளாண்மை அரசமைவு, மக்களாட்சி என்னும் ஜனநாயக மரபுகள் வளரத் துணை செய்ததோ அது போலவே சித்த மருத்துவமும் மக்களுடைய நல்வாழ்வுக்காக அரும்பணியாற்றி வந்துள்ளது. பல்லவர், சோழர் காலத்தில் இருந்த ஏராளமான கல்வெட்டுகள் இதனை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கின்றன என்பதனைக் காட்டுகிறார்.

குறிப்பாக “அகத்தியர், பரிபூரணம்” என்னும் மருத்துவ நூல், சித்த மருத்துவம் மேலோர், கீழோர், செல்வர் - வறியவர் என்னும் சமூக வேற்றுமைகளை, குறிப்பாக நால்வருணப் பாகுபாட்டைப் புறம் தள்ளிப் பாமரமக்களுக்காகச் சித்த மருத்துவம் நடைமுறைப் படுத்தப்பட்டது என்பதையும் செல்வர் பணம் கொடுத்து மருத்துவம் செய்து கொள்ளும் வசதி படைத்தவர்கள், ஆனால் கீழ்த்தட்டு மக்கள் வறிய நிலையில் இருப்பதால் அவர்களுக்குச் சித்த மருத்துவம் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. இந்த நோக்கத்தின் அடிப்படையை உணர்த்தும் பொருட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்கந்தோறும் அரிய செய்திகளும், விவரங்களும் விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன.

மருத்துவத்தின் தேவை சித்த மருத்துவத்தின் சிறப்பு, உடல்நலம் பேண அடிப்படைத் தேவைகள், நோயற்ற வாழ்வு, நோய்வரின் நோய்நாடி, அதுதணிக்கும் வாய் நாடிச் செய்ய வேண்டிய மருத்துவம், உணவே மருத்துவம், மருந்தே உணவு என்னும் கோட்பாடு, தாவரங்களும் உயிரினங்களும் உலோகங்களும் அதாவது பஞ்ச பூதங்கள் எல்லாம் மனித நலன்களுக்காகப் பயன்படுமாற்றல் ஆகிய எல்லாவற்றையும் மிக அருமையாகத் திரட்டித் தந்துள்ளார் ஆசிரியர்.

சித்த மருத்துவம் எப்படித் தமிழ் நாட்டில் வளர்ந்து வந்துள்ளது என்பதையும் முரண்பாடுகள் - அறுசுவை உணவு, நட்பு, பகை என்பனவற்றையும் அதாவது பொருளை முதலாவதாகக் காணும் கோட்பாட்டில் உணவே மருந்து - மருந்தே உணவு என்னும் அடிப்படையில் பல செய்திகளை நூல் எடுத்துச் சொல்லுகிறது. பல்லவர் காலம் தொடங்கி விஜயநகர மன்னர் காலம்வரை அன்று நிலைத்திருந்த அரசுகள் சித்த மருத்துவத்தை ஊக்குவித்துப் பராமரித்து வந்ததைக் கல்வெட்டு சான்றுகளுடன் நிறுவுவதோடு தஞ்சை மராட்டிய வேந்தரான சரபோஜி வைத்திய நூல்கள் திரட்டுவதற்காக எடுத்து கொண்ட முயற்சிகளைச் சிறப்பாக எடுத்துச் சொல்லுகிறார். மரணமிலாப் பெருவாழ்வு திருமூலர் காலம் தொடங்கி இராமலிங்க அடிகளார் காலம் வரை பேசப்பட்டு வந்துள்ளது. சித்த மருத்துவத்தை எவ்வாறு நோக்க வேண்டும் என்பதனைத் தமிழிலுள்ள சித்த மருத்துவ நூல்கள் துணையுடன் ஆசிரியர் சுவைப்பட எடுத்துச் சொல்லியுள்ளார்.

ஐம்பூதங்களை மருந்தாக மாற்றுதல், நாடி வழி வாதம் பித்தம், ஐயம், நோய் தேர்வு செய்தல், வாயுக்கள் தாதுக்கள் இடையே உள்ள தாக்குறவு, நாடி நோய்க்குறிகளை காட்டும் முறைமை, மருத்துவத்தில் சுவை பெறும் நிலைமை, மருந்துத்தேர்வு, உறுப்புகளும் அவற்றுக்கான தனி மருந்துகளும், நிலத்தையொட்டிய பாத்திரங்கள், நோய் நீராடல், உண்கலம், நோய், ஆடை, அகமருந்து, புறமருந்து, அவை செய்யும் முறை என்பன பற்றியெல்லாம் ஆசிரியர் ஆய்ந்து தரும் உண்மைகள்-இன்று வாழும் மக்களுக்கும் தேவைப்படும் செய்திகள் ஆகும். எடுத்துக்காட்டாக இரத்தத்தை உண்டாக்கத் துவர்ப்பு, எலும்பை வளர்க்க உப்பு, தசையை வளர்க்க இனிப்பு, கொழுப்பை உண்டாக்கப் புளிப்பு, நரம்பை வலுவாக்கக் கசப்பு, சுரப்பிகளைச் சீராக்கக் காரம் தேவை என்பன போன்ற செய்திகளை விரிவாகக் கூறியுள்ளார். இத்தகைய பகுப்பாய்வு இன்றைய பல்வேறு பல் மருத்துவ முறைகளிலும் ஏற்கப்பட்டு வருகிறது.

நஞ்சையும் மருந்தாக்குவது சித்த மருத்துவம். மூலிகைகள், அவற்றின் சிறப்பு, மருத்துவப் பயன்கள், மருந்து செய்தல், புடம் போடுதலின் சிறப்பு, அதற்காகப் பயன்படுத்தப்படும் எரிபொருள்கள், எரிபொருள்களால் செய்யப்படும் மருந்துகள், மருந்து வகைகள், அவை பயன்படும் காலம் (வயது) என்பன பற்றியெல்லாம் தெளிவாக ஆசிரியர் எடுத்துக்கூறுகிறார். பல சித்த மருத்துவ நூல்கள் கூறும் செய்திகள் பல இந்த நூலில் சுருக்கமாக எடுத்துக் கூறப்படுகின்றன. இது பாராட்டப் படவேண்டியதாகும். நூலின் சிறப்பான பகுதி சித்தர்கள் மனித சமுதாய நலன் மேம்பட ஆற்றிய தொண்டு பணி பற்றியதாகும். சித்த மருத்துவத்தில் பரிணாம வளர்ச்சி - காலம் தோறும் படிப்படியாக அது வளர்ந்தடைந்த நிலைமையைத் திருமூலர் காலம் முதல் இன்றளவும் அவை பெற்ற மாற்றங்கள் உள்ளிட பல செய்திகளை விரிவாக எடுத்துக் கூறுகிறது. தமிழ் இலக்கியத்தில் சித்தர் நெறி பெறும் பங்கு - சித்துகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா, அதாவது, இயற்கை கடந்த செயல் தன்மையாலும், இடத்தாலும் வேறுபடுவதால் கணக்கிட்டுச் சொல்ல முடியாது என்பதனை இலக்கியச் சான்றுகளுடன் நிறுவ முற்படுகிறார்.

மரணமில்லாப் பெருவாழ்வை வலியுறுத்தும் சித்த மருத்துவம் செத்தாரை எழுப்புதல் பற்றியும் கூறுகிறது. அதே போது வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் சித்தர்கள் சாதி, சமயம் கடந்தவர்கள் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தவர்கள். சித்தர்கள் வகுத்த நெறி வேதங்கள் ஆகா. மக்களுக்கான நல்வாழ்வு, இலக்கியம், ஆனால் பல இடங்களில் சங்கேதச் சொற்களைப் பயன்படுத்தும் இலக்கியம் என்பதனைத் தெளிவுபட எடுத்துக் கூறுகிறார். வரலாற்று அடிப்படையில் நோக்குவோமானால், சித்த மருத்துவம் அடித்தட்டு மக்களுடைய தொழிலாக, பணியாக இருந்து வந்துள்ள பான்மையை அறியலாம். அலோபதி முறை மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே பெரும் வாய்ப்புத் தருவதாக வளர்ந்து வந்துள்ளது. ஆனால் உலக மயமாக்கல் என்னும் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் சித்த மருத்துவ நோக்கமும் தன்மையும் மாறிவிடுவதற்கான வாய்ப்புண்டு. இது தவிர்க்கப்பட வேண்டும்.

கடந்த நூற்றாண்டில் சாம்பசிவம் பிள்ளை என்னும் அறிஞர் தொகுத்த சித்த மருத்துவக் களஞ்சியம் முன்னோடி நூல், முனைவர் வாசுதேவன் படைத்துள்ள இவ்வாய்வு நூல் வரும் தலைமுறையினருக்கு அறிவுக் கருவூலமாகச் சித்த மருத்துவர்க்கும் மாணாக்கர்களுக்கும் வழிகாட்டியாக அமையும். வாசகர்களுக்கு இவ் உண்மை புலனாகும்.

தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
- ஓர் ஆய்வு

ஆசிரியர் : முனைவர் இர. வாசுதேவன்,
வெளியீடு : பூங்கொடி பதிப்பகம்,
14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர்,
சென்னை - 4, விலை : ரூ. 240.00

நன்றி: கீற்று.காம்

பூவுலகின் நண்பர்களிடமிருந்து

உணவா? விஷமா?

-முடச்சிக்காடு புதியபாரதி
(murasu2006@yahoo.com)

கேரள மாநிலம் காசர்கோடு, இன்னும் அந்த சாபத்தில் இருந்து மீளவில்லை. இன்று வரையிலும் காலோ, கையோ, இதயமோ, மூளையோ, உயிரோ..., ஏதோ ஒன்று இல்லாமல் தான் அங்கு குழந்தைகள் பிறக்கின்றன. சில பெரியவர்கள் திடீரென ரத்தம் கக்கி சாகின்றனர். புற்றுநோய், காசநோய், மாரடைப்பு, மூளை வளர்ச்சியின்மை.. என ஏதேனும் ஒரு நோய்கள் அண்டாத மனிதர்களே அங்கு இல்லை.

கேட்டாலே நெஞ்சை உறைய வைக்கும் இந்த அவலத்தின் மூலம் எது?

7000 ஏக்கரில் விரிந்து கிடந்த முந்திரி தோட்டத்தை திடீரென தாக்கி சிதைத்தன பூச்சிகள். பூச்சிகளின் தொல்லையால் நிலை தடுமாறிய கேரள முந்திரி கார்பரேஷன் எடுத்த முடிவு தான் காசர்கோடு மாவட்டத்தையே விஷக்குழியில் தள்ளியது. ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்பான் என்ற விஷத்தை முந்திரி தோட்டத்தில் கொட்டியது அந்நிறுவனம். மிகவும் சக்தி வாய்ந்த அந்த விஷத்தால் பூச்சிகள் அழிந்ததோ இல்லையோ? நீர், நிலம், காற்றில் மிக வேகமாக ஊடுருவிய எண்டோசல்பான் மனிதர்களுக்கு கொள்ளை நோய்களை வாரி வழங்கியதுடன் ஜென்ம சனியாக அந்த மாவட்டத்தையே ஆட்டி படைக்க தொடங்கி விட்டது. 1971ல் தொடங்கி 30 வருடங்களுக்கும் மேலாக நடந்த பாவ செயலை, ஒரு டாக்டர் கண்டு பிடித்து உலகுக்கு சொல்ல, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைப்போல 2003ல் அந்த விஷத்தை தடை செய்தது கேரள உயர்நீதி மன்றம்.

இந்த கொடூரத்தை நினைவில் வைத்துக்கொண்டு, இப்போது தமிழக டெல்டா மாவட்டங்களுக்கு வருவோம்.

தஞ்சை, நாகை திருவாரூர் அடங்கிய டெல்டா பூமியில், பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதம் வரை சுமார் 5 லட்சம் ஏக்கர் அளவுக்கு உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக உளுந்து பயிரை புரோட்டீனிய புழுக்கள் உண்டு-இல்லை என்றாக்கி வருகின்றன. வெறுத்துப்போன விவசாயிகள் 10 நாளுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 250 முதல் 500 மிலி எண்டோசல்பான் விஷத்தை தெளிக்கிறார்கள். 60 நாள் பயிரான உளுந்துக்கு 30 நாள் வரை, நாளொன்றுக்கு 3 முறை மருந்து தெளிக்கப்படுகிறது.

இந்த கணக்குப்படி பார்த்தால் ஒரே மாதத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 3.75 லட்சம் முதல் 7.5 லட்சம் லிட்டர் எண்டோசல்பான் காற்றில், நீரில், உணவில் கலந்து உயிருக்குள் ஊடுருவுகிறது. இது மட்டுமின்றி அதன் பிறகு பயிரிடப்படும் நெல் பயிருக்கும் இதே எண்டோசல்பானைத்தான் லிட்டர், லிட்டராக கொட்டுகிறார்கள் நம் விவசாயிகள்.

இது காசர்கோட்டைக் காட்டிலும் விபரீதமானது. பெரும்பான்மை உணவுத் தேவையை டெல்டா மாவட்டங்களே நிறைவு செய்கிறது என்பதால், ஒட்டுமொத்த தமிழகமும் இந்த விபரீதத்துக்கு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பது தான் விஷயமே!

நம் விவசாயத்துக்கு 15 ஆயிரம் வருட பாரம்பரியம் உண்டு. இன்று விவசாயத்தில் வெற்றி கண்ட எல்லா மேலை நாடுகளும் நம்மிடம் தொழில்நுட்பத்தை பிச்சை வாங்கியவைகள் தான். வீட்டுக்கு வீடு வளர்க்கப்பட்ட மாடுகளின் சாணம், வயற்காட்டோரம் இருக்கும் மரங்களின் இலை தழைகள்தான் உரங்கள். பருவத்துக்கேற்ற ரகங்கள்.

பயிருக்கு கேடு செய்யும் ஒரு பூச்சியிருந்தால், அதை சாப்பிடும் 5 பூச்சிகள் இயல்பாகவே வளரும் சூழல். உழைப்பு மட்டுமே விவசாயியின் முதலீடு. சாகுபடியில் கிடைக்கும் உற்பத்தி முழுவதும் லாபம். இது தான் நம் பாரம்பரியம். விவசாயிகளின் வியர்வையில் மட்டுமே உப்பை காணும் வயற்காடுகளில் உற்பத்தியாகும் அத்தனை உணவு பயிர்களும் முழு சக்தி தருவனவாக இருந்தன.

கைபிடி மண்ணை அள்ளி ஆராய்ந்தால் நூற்றுக்கணக்கான மண்புழுக்கள், லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள்.., சிலந்தி, தவளை, தட்டான், குளவி, பறவைகள் என வயலே சங்கீத மேடையாக இருக்கும். ஆற்காடு கிச்சடி, திருவண்ணாமலை தூயமல்லி, புதுக்கோட்டை மாப்பிள்ளை சம்பா, தஞ்சை சம்பா மோஷனம், ஒட்டடை சம்பா, சீரக சம்பா என உலகை பொறாமைப்பட வைத்தன நம் உற்பத்தி செய்த உணவு ரகங்கள்.

உள்நாட்டு உணவு தேவையை நிறைவுசெய்து, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்த நம் விவசாய தொழில்நுட்பத்தை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பார்த்த பார்வை தான் இன்றைய அவலத்துக்கு காரணம். அதிகமில்லை. ஐம்பதே ஆண்டுகளில் தமிழகத்தில் செழித்து வளர்ந்திருந்த 65 சதவீத விவசாயிகளின் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதும் கட்டத்துக்கு வந்தாயிற்று.

1949ல் தான் மாபெரும் பேரழிவுக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. 1940களில் அமெரிக்க, ஐரோப்பிய விவசாயிகள் பயன்படுத்தி, பின்னர் அதன் தன்மை உணர்ந்து தடை செய்யப்பட்ட டி.டி.சி, டி.டி.டி, பி.ஹெச்.சி போன்ற பூச்சி மருந்துகள் அந்த காலகட்டத்தில்தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தன. சூழ்ச்சியின் தன்மை அறியாமல் ஐந்துக்கும், பத்துக்கும் ஆசைப்பட்ட சில அதிகாரிகளை, கைக்குள் போட்டுக்கொண்டு இந்திய விவசாயிகள் மத்தியில் கடைவிரிக்கத் தொடங்கின பூச்சி மருந்து நிறுவனங்கள்.

சிறிது, சிறிதாக இந்த பூச்சி மருந்துகளில் மதிமயங்கினர் விவசாயிகள். 1952ல் அமெரிக்க மோட்டார் கம்பெனியான போர்டும், எண்ணை கம்பெனியான ராக்பெல்லரும் இந்திய விவசாய உற்பத்தியை அதிகரிக்க ரசாயன உதவிகளை செய்வதாக கூறி களமிறங்கின. 1959ல் புதிய ஒட்டுரக பயிர்கள் புகுத்தப்பட்டன. அதோடு நம் விவசாயிகளின் நிம்மதி முடிவுக்கு வந்தது.
வயற்காடுகள் யூரியா, பாஸ்பேட் போன்ற உப்பின் ருசிக்கு பலியாகி மலடாக தொடங்கின.

மேலை நாடுகளின் ஒட்டுரக பயிர்கள் நம் நிலத்தின் தட்ப வெப்பங்களுக்கு தாக்கு பிடிக்காமல் வாடி வதங்கின. மேலும் தீமை செய்யும் பூச்சிகளை அந்த பயிர்கள் ஈர்ததன. இன்று ஒட்டு மொத்த மனித குலத்துக்கே சவாலாக மாறிய பிரச்னையின் வித்து அப்போது தான் தூவப்பட்டது. ஒட்டு ரக பயிர்களையும், உரங்களையும் தந்த மேலை நாட்டு நிறுவனங்களே பூச்சி கொல்லிகள் என்ற பெயரில் விஷங்களையும் வழங்கின.

நம் உற்பத்தியை இறக்குமதி செய்த மேலை நாடுகள், உரங்களுக்கும், பூச்சிக் கொல்லிகளுக்கும் நாம் பழக்கப்பட்ட பிறகு, உரம் போட்ட பொருட்கள் எங்களுக்கு வேண்டாம் என்று கை விரித்து விட்டன. நம் பூமி சுயம் அழிந்து, உரங்களின்றி புல் பூண்டுகளைக்கூட பிரசவிக்க தகுதியற்றதாகி விட்ட நிலையில், இருக்கும் பூமியை விற்றுவிட்டு வெளிநாடுகளில் கொத்து வேலைக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி விட்டு தெருவோர டீக்கடைகளில் உக்கார்ந்து ஆடுபுலியாட்டம் ஆடுகின்றனர் விவசாய பெருங்குடி மக்கள். இதுதான் ஒரு அடிமைக்கதையின் சுருக்கமான வரலாறு.

உலக அளவில் இரசாயன உரம் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதன்மை இடம் வகிக்கிறது இந்தியா. உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட எண்டோசல்பான், மாலத்தியான், அல்ட்ரின், எண்ட்ரின், லின்டேன், குளோர்பைரிபாஸ் ( இது போபால் விஷவாயு சம்பவத்துக்கு காரணமான டோ கெமிக்கல் கம்பெனியின் தயாரிப்பு. அமெரிக்காவில் உற்பத்தியாகிறது. அங்கு தடை செய்யப்பட்டு தற்போது இந்திய வயல்களுக்குள் கொட்டப்படுகிறது). உள்பட 90 வகை பூச்சிக்கொல்லிகள், 147 வகை ரசாயான உரங்களை பயன்படுத்தி இந்திய காற்று, நிலம், நீரை விஷமாக்குகிறார்கள் விவசாயிகள். நெல், உளுந்து, பயறு, காய்கறிகள், எண்ணை, பூக்கள் என நிலங்களில் விளையும் எல்லாமே விஷமாகி விட்டது.

டிடிசி, எக்காலக்ஸ், ஆண்ட்ரின், பாலிடால் உள்ளிட்ட 12 விஷங்களுக்கு எதிராக உலக அளவில் நடத்தப்பட்ட 12 அழுக்குகளுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அந்த மருந்துகள் தடை செய்யப்பட்டன. ஆனால் இந்தியா இன்னும் கண்மூடி கிடக்கிறது.

வியட்நாம் நாட்டு போராளிகளை ஒழிக்க அந்த அரசு, காடுகளில் "ஏஜென்ட் ஆரஞ்ச்" என்ற பயங்கர விஷ மருந்தை விமானங்கள் மூலம் தெளித்தது. அந்த ரசாயன விஷம் பட்ட மரங்கள் கருகி அழிந்தன. அந்த ஏஜென்ட் ஆரஞ்ச் விஷமும் நம் விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் வரிசையில் இடம் பிடித்துள்ளதுதான் அதிர்ச்சி.

வேதி பூச்சி மருந்துகளை வயல்களில் கொட்டுவதால் விவசாயிகளின் நண்பர்களான மண்புழு, தவளை, பாம்பு, சிலந்தி, வெட்டுக்கிளி, தட்டான் போன்ற உயிரினங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து விட்டன. இயற்கை எதிரிகளான பூச்சிகள், விஷங்களையே புரோட்டின்களாக மாற்றிக்கொண்டு கொளுத்துப் போய்விட்டன.

விஷங்களை தெளித்தும் பூச்சிகள் அழியாததால் மேலும், மேலும் விஷங்களை கொட்டுக்கிறார்கள் விவசாயிகள். குறிப்பாக காய்கறி பயிர்களுக்கு வாரத்துக்கு 3 முறை கூட மருந்தடிக்கிறார்கள். எண்டோசல்பான் மாதிரியான பூச்சிக்கொல்லியின் வீரியம் முற்றிலும் அழிய 50 வருடங்கள் ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

குறைந்தபட்சம் பூச்சிமருந்தடித்து 23 நட்கள் கழித்து தான் காய்கறிகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் நாளை பறிக்க வேண்டிய காய்கறிக்குக்கூட இன்று மருந்தடிக்கும் பழக்கம் விவசாயிகளிடம் உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநில காய்கறிகளில் டாக்ஸிக்ஸ் லிங்க் (TOXICS LINK) நிறுவனம் நடத்திய சோதனையில் 80 சதவீதம் விஷத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உண்ணும் உணவில் 10 லட்சத்தில் 1 பங்கு விஷத்தன்மை இருக்கலாம் என்கிறது ஐநா சபை. ஆனால் இந்தியர்களின் உணவில் சராசரியாக 50 சதம் விஷம் இருக்கக்கூடும் என்கின்றன சில ஆய்வுகள்.

நேரடி உணவு பொருட்களான திராட்சை, வெள்ளரி, வெத்தலைகளில் கூட எண்டோசல்பான், மோனோகுரோட்டபாஸ் மருந்துகள் தெளிக்கப்படுகிறது. இதை சாப்பிடும்போது அந்த பொருட்களால் கிடைக்கும் சத்துக்களைக் காட்டிலும் 50 சதம் அதிக பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உற்பத்தியில் பூச்சிக்கொள்ளிகள் பயன்படுத்துவது மட்டுமின்றி இப்பயிர் வகைகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் தங்கள் பங்குக்கு விஷத்தை சேர்க்கிறார்கள் என்பது இன்னொரு அதிர்ச்சி.

பொதுவாக உளுந்து போன்ற பயறு வகைகளை இருப்பு வைக்கும் போது அந்துப்பூச்சி பதம் பார்த்துவிடும். முதலுக்கே மோசம் வரும் என்பதால் அலுமினியம் பாஸ்பேட் என்ற ஹெவி பாய்ஸனை இருப்பு வைக்கும் அறைக்குள் வைக்கிறாகள் வியாபாரிகள். அந்த விஷம் காற்றில் பரவி உளுந்திலேயே தங்கி விடுகிறது. உளுந்து நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உணவுப் பொருளாக மாறிவிட்ட நிலையில் நுகர்வோர் இந்த விபரீதம் குறித்து கவலைப்படுவதில்லை என்பது தான் சோகம்.

மேலும் விஷம் கலந்த தவிடு, புண்ணாக்கு, பயிர்களின் மிச்சங்களை உண்பதால் மாடுகள் தரும் பால், ஆடுகளின் இறைச்சி எல்லாமும் விஷ முலாம் பூசப்பட்ட பொருட்களாக உருமாறி விட்டன.

இது போன்ற விஷங்கள் உடம்பில் நிகழ்த்தும் பாதிப்புகள் சொல்லி மாளாது. மூளை, இதயம், பெண்களின் மார்பகம், கர்ப்பப்பை, விரைப்பை போன்ற இடங்களில் தங்கி புற்றுநோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்களை உருவாக்குகிறது. மேலும் நரம்பு மண்டலத்தின் ஒட்டுமொத்த இயக்கமும் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. பெண்களின் கொழுப்பு திசுக்களில் கலந்து தாய்ப்பால் வழி குழந்தைகளுக்கும் அந்த விஷம் சப்ளை செய்யப்படுகிறது என்று உயிரை கலங்கடிக்கிறார்கள் டாக்டர்கள்.

மல்லி, முல்லை, ரோஜா போன்ற மலர்களில் இயற்கை மணம் மறைந்து இன்று பூச்சி மருந்துகளின் நாற்றமே அடிக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மலர்கள் அதிகம் பயிரிடப்படும் தாமரைப்பாக்கம், வெங்கல், பூரிவாக்கம் போன்ற பகுதிகளில் பூந்தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கைகளே இந்த அவலத்துக்கு சாட்சி. மேலும் அதிகபட்ச விஷம் தெளிக்கப்படும் பூக்களை தலையில் வைப்பதால் கூட சில அபாயகரமான பாதிப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாம்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டு கிராமங்களில் மாடுகள் இல்லாத வீடே இல்லை. இன்றோ அடிமாடுகளாக கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் மாடுகள் ஏற்றுமதியாகி விட்டன. மாடுகள் மூலம் கிடைக்கும் கோமயம், சாணம், பால், தயிர், மோர் தான் விவசாயிகளின் மூலதனம். கோமயத்தில் ஆடாதொடை, ஆடு தின்னா பாலை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, துத்தி போன்ற ஆடு சாப்பிடாத இலைகளில் 5 வகைகளை 15 நாட்கள் ஊறவைத்து அந்த நீருடன் தண்ணீர் கலந்து அடித்து தான் விவசாயிகள் பூச்சிகளை கட்டுப்படுத்தினர். மேலும் மாடு தரும் பொருட்களால் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் மிகச்சிறந்த ஊக்க மருந்து. மாடுகளை இழந்ததே உணவு விஷமானதுக்கு காரணம் என்கிறார்கள் முற்போக்கு விவசாயிகள்.

உணவே மருந்து, மருந்தே உணவு என்றார்கள் நம் மூதாதை சித்தர்கள். ஒரு 50 ஆண்டு இடைவெளியில் உணவே விஷம், விஷமே உணவு என்று நமக்கு நாமே அழிவை தேடிக் கொண்டிருக்கிறோம். இந்த கட்டத்திலேனும் விழித்துக் கொள்ளாவிட்டால் நம்மை எந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.


நன்றி: பூவுலகின் நண்பர்கள்