Monday, April 20, 2009

youthful.vikatan.comலிருந்து

படிச்சாலும் ஜீரோ..!

மன்னர் மன்னன்,

ஸ்ரீ முத்துக்குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை.

ர் உச்சிவெயில் காலத்தில் மெக்காலே என்ற மேற்கத்திய தையல்காரன் தைத்துக் கொடுத்த பருத்திக் குல்லாய், இந்த அடைமழைக் காலத்துக்கு உகந்தது எனச்சொல்லி, அப்பா என்றழைக்கப்படும் அறிவாளிகளாலும், ஆசிரியர் என்றழைக்கப்படும் அதி மேதாவிகளாலும் மாணவர்களுக்கு அணிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அடிமை இந்தியாவின் 40 கோடி மக்களை அரசாண்டவர்கள் வெறும் 15,000 ஆங்கிலேயர்கள். அந்த 15,000 பேருக்கும் சேவகம் செய்ய பியூன் என்ற கடைநிலை ஊழியர்கள் தேவைப்பட்டனர். அவர்களை உருவாக்க கண்டுபிடிக்கப்பட்டதுதான் மெக்காலே கல்விமுறை.

ஒரு பியூனுக்காக அளவெடுத்து வடிவமைத்த சீருடையை நாட்டின் கலெக்டர் முதல் டாக்டர் வரை அனைவருக்கும் அணிவித்தால் என்ன நடக்குமோ அதுதான் இன்று நடக்கிறது. மெக்காலே முறை கல்விமுறை பல அறிவாளிகளுக்குப் பொருந்தாமல் பரதேசிக் கோலத்தையே தந்திருக்கின்றன. உதாரணமாக, ஒரு உலகப்புகழ் பெற்ற இந்தியரின் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் கீழே...

ஆங்கிலம் 200க்கு 89

குஜராத்தி 100க்கு 45.5

கணிதம் 175க்கு 59

பொது அறிவு 150க்கு 54

மொத்தம் 625க்கு 247.5

39.6% மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து மயிரிழையில் தேர்ச்சியடைந்த அந்த மக்கு மாணவனின் பெயர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. மெக்காலே கல்விமுறையின் 'தரத்துக்கு' இதைவிட வேறு சான்றுகள் வேண்டுமா..?

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தேர்வு முடிவுகளால் இந்தியாவெங்கும் சுமார் 2,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். படித்தவர்கள் மிகுந்த மாநிலமான கேரளாவில்தான் அதிக எண்ணிக்கையில் தற்கொலைகள் நடக்கின்றன. படித்தவர்கள் குறைவாக உள்ள பீகாரில் தற்கொலைகள் மிக அரிதாகவே நிகழ்கின்றன. கல்வி கற்றுத்தந்தது என்ன? பந்தையக் குதிரைகளுக்கு ஓடுவதைத் தவிர வாழ்வில் வேறு எதுவுமே தெரியாது. அவைகளால் பாரம் சுமக்கக்கூட முடியாது. அதனால்தான் அவை கால் ஒடிந்துபோனால் மனமும் உடைந்துபோகின்றன. பணம் தேடும் பந்தயக் குதிரைகளாக மாணவர்களை மாற்றும் இந்த கல்விமுறை, வாழ்க்கையின் ஆழத்தை அளந்து சொன்னதில்லை.

உலகின் தேர்ந்த பொறியாளர்கள் அனைவருக்கும் ஈபிள் டவர்தான் கனவுக் கட்டடம். உலகத்தின் மிகப்பெரிய எஃகு கோபுரமான இதை கட்டிய கஸ்தோம் ஈபிள், பொறியியல் தேர்வில் தோல்வியடைந்தவர் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா..? பௌதிகத் துறையின் கலங்கரை விளக்கமான நியூட்டனே இண்டர்மீடியேட் தேர்வில் தோல்வி அடைந்தவர்தான். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், கல்வி என்பது வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் இல்லை, அவற்றை தாண்டி வெளியே இருக்கிறது என்பதுதான் சரியானது!


No comments:

Post a Comment